அகதிகளை ஏற்றிச்சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்து - 40 பேர் பலி

மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு படகில் புறப்பட்டுள்ளனர்
அகதிகளை ஏற்றிச்சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்து - 40 பேர் பலி
Published on

துனிஸ்,

பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்ரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக கடல் வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இந்த பயணத்தின் போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த 70க்கும் மேற்பட்டோர் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு படகில் புறப்பட்டுள்ளனர். அகதிகள் சென்ற படகு மத்திய தரைக்கடலில் துனிசியா நாட்டின் மஹ்தியா நகர் அருகே சென்றுகொண்டிருந்தபோது விபத்துக்குள்ளனது.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த துனிசியா கடற்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், இந்த படகு விபத்தில் 40 பேர் உயிரிழந்தனர். மேலும், கடலில் விழுந்த பலர் மாயமான நிலையில் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். விபத்தில் உயிருடன் மீட்கப்பட்ட அகதிகள் துனிசியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   

X

Daily Thanthi
www.dailythanthi.com