ஹமாஸ் வசமிருந்த கடைசி பணயக்கைதியின் உடலும் மீட்பு: இஸ்ரேல் தகவல்

கடைசி பணயக்கைதி உடலும் மீட்கப்பட்டிருப்பது குறித்து பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு மிகுந்த மகிழ்ச்சி வெளியிட்டு உள்ளார்.
ஜெருசலேம்,
இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினர், 1,200-க்கு மேற்பட்டோரை கொன்று குவித்ததுடன், 251 பேரை பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே பலத்த போர் மூண்டது.
2 ஆண்டுகளாக இந்த போர் நீடித்த நிலையில் தற்போது காசாவில் முதற்கட்ட போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இதற்கிடையே பல கட்டங்களாக பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இதில் பலர் உயிருடனும், சிலரின் உடல்களும் இஸ்ரேல் வசம் ஒப்படைக்கப்பட்டு வந்தன. எனினும் கடைசி பணயக்கைதியான ரான் ஜவிலி என்பரின் உடல் ஒப்படைக்கவில்லை.
எனவே அதை கண்டுபிடிப்பதற்காக இஸ்ரேல் ராணுவம் காசாவின் வட பகுதியில் உள்ள கல்லறை தோட்டம் ஒன்றில் தீவிரமாக தேடியது. தற்போது அது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டு விட்டது.இஸ்ரேலின் கடைசி பணயக்கைதி உடலும் மீட்கப்பட்டிருப்பது குறித்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மிகுந்த மகிழ்ச்சி வெளியிட்டு உள்ளார்.
தான் வாக்குறுதி அளித்தபடி அனைத்து பணயக்கைதிகளும் மீட்கப்பட்டு விட்டதாக கூறினார். கடைசி பணயக்கைதியின் உடலும் மீட்கப்பட்டதை தொடர்ந்து 2-வது கட்ட போர் நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தைக்கு வழி ஏற்பட்டிருப்பதாக சர்வதேச நிபுணர்கள் கூறியுள்ளனர்.






