டெல்லியில் நடந்தது தெளிவான ஒரு பயங்கரவாத தாக்குதல் - அமெரிக்கா கருத்து

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக 10 பேர் கொண்ட சிறப்புக்குழுவை அமைத்து என்.ஐ.ஏ. விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
டெல்லியில் நடந்தது தெளிவான ஒரு பயங்கரவாத தாக்குதல் - அமெரிக்கா கருத்து
Published on

வாஷிங்டன்,

டெல்லி செங்கோட்டை எதிரே கடந்த 10-ந் தேதி இரவு, வெடிபொருளை மறைத்து எடுத்துச்சென்ற கார் வெடித்துச் சிதறியது. இதில் 13 பேர் பலியானார்கள். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஜம்மு காஷ்மீர் மற்றும் அரியானா மாநிலத்தில் 3 ஆயிரம் கிலோ அமோனியம் நைட்ரேட் மற்றும் பல ஆயுதங்கள், பொருட்கள் கைப்பற்றப்பட்டதன் தொடர்ச்சியாக இந்த வெடிப்பு நிகழ்த்தப்பட்டு உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக முதலில் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பயங்கரவாதத்தோடு தொடர்புடைய சம்பவம் என்பதால் பின்னர் உள்துறை மந்திரி அமித்ஷா உத்தரவின்பேரில் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.

இந்த விசாரணைக்காக 10 பேர் கொண்ட சிறப்புக்குழுவை அமைத்துள்ளது. போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதற்கு மேலான பதவிகளில் உள்ள அதிகாரிகளின் மேற்பார்வையில் இந்த குழு செயல்பட இருக்கிறது. இந்த சிறப்புக்குழுவினர் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், டெல்லியில் நடந்தது தெளிவான ஒரு பயங்கரவாத தாக்குதல் என அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ கூறுகையில், டெல்லியில் நடந்தது தெளிவான ஒரு பயங்கரவாத தாக்குதல் என்றே தெரிகிறது. இதை விசாரிக்க அமெரிக்கா உதவி செய்ய முன்வந்தது. ஆனால் இந்தியா மிக கவனமாகவும் திறமையாகவும் விசாரித்து வருகிறது. இந்தியர்களை வெகுவாக பாராட்ட வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com