லெபனானில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; 13 பேர் பலி

பயங்கரவாத கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன என கூறி இஸ்ரேல் அவ்வப்போது லெபனான் மீது தாக்குதலை நடத்தி வருகிறது.
லெபனானில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; 13 பேர் பலி
Published on

சிடோன்,

லெபனானின் தெற்கே சிடோன் என்ற கடலோர நகரில், பாலஸ்தீனிய அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் பாதுகாப்பு படை வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் 13 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்தனர். அவர்களையும், உடல்களையும் மீட்க ஆம்புலன்சுகள் சென்றுள்ளன.

இதுபற்றி இஸ்ரேல் கூறும்போது, இஸ்ரேல் மற்றும் ராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்காக, ஹமாஸ் அமைப்பு சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வந்த பகுதி மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது என தெரிவித்தது. இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காசா பகுதியில் 69 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர்.

பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டது. லெபனான் நாட்டில் இருந்தபடி, இஸ்ரேலை தாக்கியது. இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டது. இதில், அடுத்தடுத்து பலர் கொலை செய்யப்பட்டனர். ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார். அடுத்து, ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர் என்பவரை இஸ்ரேல் தாக்கி படுகொலை செய்தது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றம் தொற்றி கொண்டது.

2024-ம் ஆண்டு நவம்பரில் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. எனினும், பயங்கரவாத கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன என கூறி இஸ்ரேல் அவ்வப்போது லெபனான் மீது தாக்குதலை நடத்தி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com