மோடி எனக்கு மிகச்சிறந்த நண்பர்; அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு

இந்தியா சிறப்பான நாடு. அங்கு எனது மிகச்சிறந்த நண்பர்(மோடி) தலைமை பொறுப்பில் இருக்கிறார் என்று டிரம்ப் கூறினார்.
கெய்ரோ,
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா மண்டலத்தை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே 2 ஆண்டுகளாக நீடித்து வந்த போர், அமெரிக்க அதிபர் டிரம்பின் மத்தியஸ்தம் காரணமாக முடிவுக்கு வந்தது. இதையடுத்து ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் இருந்த இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுவித்தனர். இதற்கு ஈடாக பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்தது.இதற்கிடையே எகிப்தின் ஷர்ம் அல்-ஷேக் நகரில் நடந்த காசா அமைதி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல்-சிசி, இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் உள்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் பேசிய டிரம்ப், இந்தியாவை பாராட்டினார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
“இந்தியா சிறப்பான நாடு. அங்கு எனது மிகச்சிறந்த நண்பர் (மோடி) தலைமை பொறுப்பில் இருக்கிறார். அவர் மிகச் சிறப்பான பணிகளை செய்து வருகிறார். இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்றாக மிகவும் நன்றாக வாழப் போகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்,” என்றார்.அப்போது தனக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பை பார்த்து “அப்படிதானே?” என்று டிரம்ப் சிரித்தபடி கேட்டார். தொடர்ந்து பேசிய டிரம்ப், “என்னைப் பொறுத்தவரை மோடியும் ஷபாஸ் ஷெரீப்பும் சிறந்த தலைவர்கள்” என்றார். மேலும் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீரையும் டிரம்ப் பாராட்டினார்.
பின்னர் ஷபாஸ் ஷெரீப் பேசியதாவது:-
“டிரம்பின் அயராத மற்றும் இடைவிடாத முயற்சிகளுக்குப் பிறகு மத்திய கிழக்கில் அமைதி அடையப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்தியதற்காக டிரம்பின் பெயரை நோபல் பரிசுக்கு பாகிஸ்தான் பரிந்துரைத்தது. தெற்காசியாவில் மட்டுமல்ல, மத்திய கிழக்கிலும் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றியதற்காக டிரம்பை மீண்டும் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்க பாகிஸ்தான் விரும்புகிறது,” என்றார். முன்னதாக டிரம்ப் அளித்த பேட்டியில் கூறியபோது, “இஸ்ரேல்-காசா போரை நிறுத்தியதன் மூலம் 8 போர்களை நிறுத்திவிட்டேன். அடுத்ததாக பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையேயான மோதலை நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன்,” என்றார்.






