அணு ஆயுத சோதனை விவகாரம்; டிரம்ப் கருத்துக்கு பாகிஸ்தான் விளக்கம்

வடகொரியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன என்று டிரம்ப் கூறினார்.
நியூயார்க்,
அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது நாடு அணு ஆயுத சோதனை நடத்தும் என்று சமீபத்தில் கூறினார். இதற்கிடையில் டிரம்ப் கூறும்போது, ரஷ்யாவும் சீனாவும் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபடுகின்றன என்று தெரிவித்தார்.“இதுகுறித்து அவர்கள் பேச மாட்டார்கள். ஆனால் நாங்கள் அப்படி அல்ல. மற்றவர்களும் அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறார்கள். வடகொரியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன,” என்றார் டிரம்ப்.
இந்த நிலையில், டிரம்ப் தெரிவித்த கருத்துக்கு பாகிஸ்தான் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:“பாகிஸ்தான் முதலில் அணு ஆயுத சோதனைகளை நடத்தவில்லை. தற்போதும் முதலில் அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்கும் நாடாக பாகிஸ்தான் இருக்காது. நாங்கள் முதலில் அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்க மாட்டோம்,” என்றார்.
அதேபோல், அணு ஆயுத சோதனை தொடர்பாக டிரம்ப் தெரிவித்த கருத்துக்கு சீனாவும் மறுப்பு தெரிவித்துள்ளது. “சீனா ஒரு பொறுப்பான அணு ஆயுத நாடாகும். அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கையில் சீனா உறுதியாக உள்ளது,” என்று சீனா தெரிவித்துள்ளது.






