‘இந்தியா-அமெரிக்காவின் எதிர்கால உறவுகள் குறித்து டிரம்ப் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளார்’ - வெள்ளை மாளிகை

பிரதமர் மோடி மீது அதிபர் டிரம்ப் மிகுந்த மரியாதை வைத்துள்ளார் என கரோலின் லெவிட் தெரிவித்துள்ளார்.
‘இந்தியா-அமெரிக்காவின் எதிர்கால உறவுகள் குறித்து டிரம்ப் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளார்’ - வெள்ளை மாளிகை
Published on

வாஷிங்டன்,

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் மீதான போரை இந்தியா மறைமுகமாக ஆதரித்து வருவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதற்கிடையில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் பரஸ்பர வரி விதிக்கப்படுவதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பின்னர் ரஷிய நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணமாக காட்டி, இந்தியா மீதான வரியை 50 சதவீதமாக உயர்த்தினார்.

இதனால் இந்தியா-அமெரிக்கா இடையிலான பொருளாதார உறவுகளில் சிக்கல் ஏற்படும் சூழல் உருவானது. அதே சமயம், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை படிப்படியாக நிறுத்துவோம் என பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் உறுதி அளித்துள்ளதாக டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார். இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தியா-அமெரிக்காவின் எதிர்கால உறவுகள் குறித்து டிரம்ப் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளார் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லெவிட் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தியா-அமெரிக்காவின் எதிர்கால உறவுகளைப் பற்றி அதிபர் டிரம்ப் மிகவும் நேர்மறையான, வலுவான நம்பிக்கை உணர்வை கொண்டுள்ளார்.

சமீபத்தில் வெள்ளை மாளிகையில் பல உயர் இந்திய-அமெரிக்க அதிகாரிகளுடன் ஓவல் அலுவலகத்தில் தீபாவளி கொண்டாடப்பட்டபோது பிரதமர் மோடியுடன் அதிபர் டிரம்ப் பேசினார். மேலும், வர்த்தக விவகாரங்கள் குறித்து அதிபர் டிரம்ப்பும், அவரது வர்த்தகக் குழுவும் இந்தியாவுடன் தீவிரமான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். பிரதமர் மோடி மீது அதிபர் டிரம்ப் மிகுந்த மரியாதை வைத்துள்ளார். அவர்கள் தொடர்ந்து இணைப்பில் இருந்து அடிக்கடி பேசி வருகிறார்கள் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com