இந்திய ரசாயன நிறுவனத்துக்கு அமெரிக்கா தடை


இந்திய ரசாயன நிறுவனத்துக்கு அமெரிக்கா தடை
x
தினத்தந்தி 14 Nov 2025 6:23 AM IST (Updated: 14 Nov 2025 12:08 PM IST)
t-max-icont-min-icon

இந்திய ரசாயன நிறுவனத்துக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

வாஷிங்டன்,

ஒரு நாட்டின் மீதோ அல்லது ஒரு நிறுவனம் அல்லது தனிநபர் மீது மற்றொரு நாடு அல்லது ஐ.நா. போன்ற அமைப்பு நிதி மற்றும் வணிக வரையறைகளை விதிப்பது பொருளாதார தடை எனப்படும். இதன் நோக்கம், குறிப்பிட்ட நாடு அல்லது நபர் சட்டவிரோதமான, மனித உரிமை மீறலான, அல்லது உலக அமைதிக்கு அச்சுறுத்தலான செயல்களில் ஈடுபடுவதை தடுக்க அல்லது அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து கொள்கையை மாற்றச் செய்வதாகும்.

பொதுவாக வல்லரசு நாடான அமெரிக்காவே அதிக அளவிலான பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. இந்த பொருளாதார தடைகள் மூலம் அமெரிக்காவிலோ அல்லது நட்பு நாடுகளிலோ தடை பெற்ற நிறுவனமோ அல்லது நபரோ பொருளாதார ரீதியாக எவ்வித வர்த்தகத்திலும், தொழிலிலும் ஈடுபட முடியாது.

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றது முதல் ‘அமெரிக்கா முதலில்’ என்ற கொள்கையை கடைப்பிடித்து வருகிறார். இதனிடையே அணு ஆயுத திட்டத்தில் ஈடுபடுவதாக கூறி தனது பரம எதிரியான ஈரான் மீது பொருளாதார தடைவிதித்தார். மேலும் இஸ்ரேல் உடனான ஈரானின் மோதலில் நவீன ராக்கெட்டுகளை பயன்படுத்தி ஈரான் அணு ஆயுத தளங்களை குறிவைத்து அழித்து வன்மத்தை கக்கினார். மேலும் ஈரானுடன் வர்த்தக ரீதியாக தொடர்பில் உள்ள வணிக, ராணுவ நிறுவனங்களை குறிவைத்து அதன்மீது தொடர்ந்து பொருளாதார தடைவிதித்து வருகிறார்.

இந்தநிலையில் அமெரிக்க அரசாங்கம் உலகளவில் இயங்கி வரும் வர்த்தக நிறுவனங்கள் மீது நேற்று புதிதாக பொருளாதர தடை விதித்தது. ஈரானின் ஏவுகணை மற்றும் ஆளில்லா டிரோன்கள் உற்பத்திக்கு உதவுவதாக கூறி ஈரான், சீனா, அரபு அமீரகம், துருக்கி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 32 நிறுவனங்கள் மீது அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் பொருளாதார தடை விதித்தது.

இந்திய நிறுவனம் ஒன்றின் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மராட்டியத்தை சேர்ந்த ரசாயன உற்பத்தி நிறுவனமான பார்ம்லேண் பிரைவேட் லிமிடேட் நிறுவனம் அரபு அமீரக நிறுவனத்துடன் இணைந்து ஏவுகணை உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் சோடியம் குளோரேட் மற்றும் சோடியம் பெர்குளோரேட் ரசாயனத்தை ஈரானுக்கு ஏற்றுமதி செய்வதாக தெரிவித்து தடை விதித்தது.

1 More update

Next Story