கருத்துக் கணிப்புகளை வெளியிட கட்டுப்பாடுகள்: தேர்தல் கமிஷன் அறிவிப்பு


கருத்துக் கணிப்புகளை வெளியிட கட்டுப்பாடுகள்: தேர்தல் கமிஷன் அறிவிப்பு
x
தினத்தந்தி 4 April 2024 3:27 AM GMT (Updated: 4 April 2024 3:51 AM GMT)

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது.

சென்னை,

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந் தேதியன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெறும். எனவே வாக்குப்பதிவுக்கு முந்தைய அல்லது பிந்தைய கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை வெளியிடுவதற்கான கட்டுப்பாடுகளை இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, குறிப்பிட்ட காலக்கட்டத்தில் வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவதோ மற்றும் அதை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் மூலமாக யாரும் வெளியிடக் கூடாது. அல்லது, வேறு எதாவது முறையில் பரப்பக்கூடாது.

ஒரு பொதுத் தேர்தலின்போது, வாக்குப்பதிவிற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வாக்குப்பதிவு முடிந்த பின்பு அரை மணிநேரம் வரை கருத்துக் கணிப்பிற்கான தடை தொடரும்.

பல இடைத் தேர்தல்கள் வெவ்வேறு நாட்களில் ஒன்றாக நடைபெற்றால், முதல் கட்ட வாக்குப்பதிவிற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல், கடைசிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்த அரைமணி நேரம் வரை தடை தொடரும்.இந்த விதிமுறைகளை மீறினால், 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story