கைது நடவடிக்கை; கெஜ்ரிவால் குடும்பத்தினரை இன்று சந்திக்க ராகுல் காந்தி முடிவு


கைது நடவடிக்கை; கெஜ்ரிவால் குடும்பத்தினரை இன்று சந்திக்க ராகுல் காந்தி முடிவு
x

அமலாக்க துறை அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு பா.ஜ.க. ஆதரவு தலைவர்கள் ஆதரவு தெரிவித்ததுடன், உண்மை வெளிவரவேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

புதுடெல்லி,

டெல்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்-மந்திரியும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியது.

ஆனால், அமலாக்கத்துறையின் சம்மன் சட்ட விரோதமானது என்று கூறி கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வந்தார். இது தொடர்பான வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் நடைபெற்ற நிலையில், கெஜ்ரிவாலின் வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதற்கிடையே அமலாக்கத்துறை கைதுக்கு தடை விதிக்க கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, அமலாக்கத்துறை கைதுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இந்த நிலையில், 12 அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை குழுவினர், கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்று நேற்று சோதனை நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக, அமலாக்க பிரிவு அதிகாரிகள் கெஜ்ரிவாலை நேற்று இரவு கைது செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கெஜ்ரிவால் வீட்டின் முன் ஆம் ஆத்மி தொண்டர்கள் குவிந்தனர். கலவரம் பரவாமல் இருக்க போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், கெஜ்ரிவால் கைது நடவடிக்கைக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வது என ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது. அதற்கான துரித நடவடிக்கையில் இறங்கியது. எனினும், அவசர வழக்காக அது எடுத்து கொள்ளப்படவில்லை. இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா கூட்டணியை சேர்ந்த தலைவர்களும் கெஜ்ரிவாலுக்கு தங்களுடைய ஆதரவை வழங்கினர். இந்த சூழலில், ராகுல் காந்தி கெஜ்ரிவால் அல்லது அவருடைய குடும்பத்தினரை சந்திக்க முயற்சிப்பார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களுக்கு சட்ட உதவி வழங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ஆனால், அமலாக்க அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு பா.ஜ.க. ஆதரவு தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். உண்மை வெளிவரவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story