வெப்ப அலை பரவல்; தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை


வெப்ப அலை பரவல்; தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை
x
தினத்தந்தி 22 April 2024 9:51 AM GMT (Updated: 22 April 2024 12:45 PM GMT)

பிரதமர் மோடி தலைமையில், வெப்ப அலை பரவலை எதிர்கொள்வதற்கு தயாராவது பற்றி கடந்த 11-ந்தேதி கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் வெப்ப அலை பரவல் பெரும் தாக்கம் ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் கடந்த 19-ந்தேதி 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதல்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

இதில், 60 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இதனை தொடர்ந்து, ஏப்ரல் 26-ந்தேதி 2-வது கட்ட தேர்தலும், மே 7, மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் மீதமுள்ள கட்டங்களுக்கான தேர்தலும் நடைபெறும். எனினும், வெப்ப அலையால், மக்கள் வாக்களிப்பதில் சிரமம் ஏற்படாமல் இருப்பது பற்றி தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த சூழலில், இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ராஜீவ் குமார் தலைமையில், தேர்தல் ஆணையாளர்கள் ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோர் கூட்டம் ஒன்றை நடத்தினர்.

இதில், நாடு முழுவதும் காணப்படும் வெப்ப அலை பரவலால் ஏற்படும் ஆபத்துகளை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட வேண்டிய நடவடிக்கைகளை பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில், இந்திய வானிலை ஆய்வு மையம், தேசிய பேரிடர் மேலாண் கழகம் மற்றும் மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதற்கு முன் பிரதமர் மோடி தலைமையில், வெப்ப அலை பரவலை எதிர்கொள்வதற்கு தயாராவது பற்றி கடந்த 11-ந்தேதி கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இதில், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், நிலவ கூடிய வெப்பநிலை பற்றி அவரிடம் விரிவாக விளக்கி கூறப்பட்டது.

இதேபோன்று, அத்தியாவசிய மருந்துகள், மருந்து பொருட்கள், திரவங்கள், குடிநீர் உள்ளிட்ட சுகாதார பிரிவில் தயாராக வேண்டிய விசயங்கள் பற்றி ஆலாசிக்கப்பட்டன.


Next Story