நாமக்கல்லில் வாகன பேரணி- மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்பு


நாமக்கல்லில் வாகன பேரணி- மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்பு
x

மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் வருகையையொட்டி நாமக்கல்லில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாமக்கல்,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், நாளை காலை 9 மணியளவில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் வகையில் வாகன பேரணியில் பங்கேற்கிறார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு கட்சியினர் உற்காக வரவேற்பு அளிக்கின்றனர்.

தொடர்ந்து அங்கிருந்து நேராக ஹெலிகாப்டரில் பரமத்தியில் உள்ள பி.ஜி.பி. கல்லூரிக்கு செல்கிறார். பின்னர் அங்கிருந்து நாமக்கல்லுக்கு சென்று வாகன பேரணியில் பங்கேற்கிறார். இந்த வாகன பேரணியானது நாமக்கல் -சேலம் ரோட்டில் உள்ள எம்.ஜி.எம். தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே தொடங்கி, சேலம் சாலை சந்திப்பு, நேதாஜி சிலை மற்றும் பஸ் நிலையம் வழியாக நடைபெற்று மணிக்கூண்டு பகுதிக்கு சென்றடைய உள்ளது.

இந்த வாகன பேரணி நிறைவடைந்ததும் ராஜ்நாத் சிங் அங்கிருந்து புறப்பட்டு நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ஹெலிகாப்டரில் செல்கிறார். மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் வருகையையொட்டி நாமக்கல்லில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story