3-வது டெஸ்ட்: ஒரு மணி நேரத்தில் இந்திய அணியை வீழ்த்துவோம் - இங்கிலாந்து பயிற்சியாளர் சவால்


3-வது டெஸ்ட்: ஒரு மணி நேரத்தில் இந்திய அணியை வீழ்த்துவோம் - இங்கிலாந்து பயிற்சியாளர் சவால்
x

image courtesy:ICC

இந்தியா-இங்கிலாந்து 3-வது டெஸ்டின் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.

லண்டன்,

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் தலா 387 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆகின. பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 3-வது நாள் முடிவில் ஒரு ஓவரில் விக்கெட் இழப்பின்றி 2 ரன் எடுத்திருந்தது.

இந்நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 2-வது இன்னிங்சில் 62.1 ஓவர்களில் 192 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக ஜோ ரூட் 40 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும், பும்ரா, முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதன் மூலம் இந்தியாவுக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியாவுக்கு இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். ஜெய்ஸ்வால் (0), கருண் நாயர் (14 ரன்), கேப்டன் சுப்மன் கில் (6 ரன்), விக்கெட் தடுப்பாளராக இறக்கி விடப்பட்ட ஆகாஷ் தீப் (1 ரன்) ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்தனர்.

4-வது நாள் முடிவில் இந்திய அணி 17.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 58 ரன்கள் எடுத்துள்ளது. லோகேஷ் ராகுல் 33 ரன்களுடன் அவுட் ஆகாமல் உள்ளார். இந்தியாவின் வெற்றிக்கு 135 ரன் தேவை. அதே சமயம் இங்கிலாந்து வெற்றிக்கு 6 விக்கெட் தேவை. இத்தகைய பரபரப்பான சூழலில் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் எஞ்சிய 6 விக்கெட்டுகளையும் ஒரு மணி நேரத்தில் கைப்பற்றி வெற்றி பெறுவோம் என்று இங்கிலாந்து துணை பயிற்சியாளர் மார்கஸ் ட்ரெஸ்கோதிக் சவால் விடுத்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "5-வது நாளின் முதல் ஒரு மணி நேரம் மிகவும் முக்கியமானது. அதில் நாங்கள் விக்கெட்டுகள் எடுக்க தாமதம் ஆனால் இந்திய அணி ஆதிக்கம் செலுத்திவிடும். இது பந்துவீச்சில் நாங்கள் எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகிறோம் என்பதை பொறுத்தது. நேற்றைய (4-வது நாள்) ஆட்டத்தின் கடைசி ஒரு மணி நேரம் எங்களுக்கு சிறப்பாக அமைந்தது. அந்த நேரத்தில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி நாங்கள் போட்டிக்குள் வந்தோம். அதே போன்று போட்டியின் 5-ம் நாளின் முதல் ஒரு மணி நேரத்திலேயே இந்திய அணியின் ஆறு விக்கெட்டுகளையும் வீழ்த்தி நாங்கள் இந்த போட்டியில் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன். இந்த போட்டியில் நாங்கள் வெற்றிபெற மைதானத்தில் இருக்கும் ரசிகர்களும் எங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்" என்று கூறினார்.

1 More update

Next Story