2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் விளையாட... - ரோகித் சர்மாவுக்கு பி.சி.சி.ஐ. அறிவுரை

2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதை ரோகித் சர்மா இலக்காக கொண்டுள்ளார்.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் போட்டி ராஞ்சியில் நாளை நடைபெற உள்ளது.

இந்த தொடரில் இந்திய அணியின் முன்னணி நட்சத்திரங்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா களமிறங்க உள்ளதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து இருவரும் ஓய்வு பெற்று விட்டதால் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடுகின்றனர். இதன் காரணமாக இந்திய ஜெர்சியில் அவர்களை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இருவரும் 2027 ஒருநாள் உலகக்கோப்பை வரை விளையாடுவதை இலக்காக கொண்டுள்ளனர்.

விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா கடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூலம் ஏறக்குறைய 7 மாதத்துக்கு பிறகு சர்வதேச போட்டிக்கு திரும்பினர். அந்த வாய்ப்பில் முதல் போட்டியில் சொதப்பிய ரோகித் கடைசி 2 போட்டிகளில் சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருதை வென்று அசத்தினார். மறுமுனையில் விராட் கோலி முதல் 2 போட்டிகளில் டக் அவுட் ஆகி ஏமாற்றினாலும் கடைசி போட்டியில் சிறப்பாக ஆடி தனது தரத்தை நிரூபித்தார்.

இதில் ரோகித் சர்மா (38 வயது) அடுத்த உலகக்கோப்பைக்கு முன் 40 வயதை எட்டிவிடுவார் என்பதால் தொடர்ந்து சிறப்பாக விளையாடி உடல் தகுதியை தக்கவைத்து கொள்ள முடியுமா? என்ற கேள்வி நிலவுகிறது. இருப்பினும் அவர் கடின உடற்பயிற்சி மூலம் உடலை பிட்டாக வைத்து கொள்ள முயற்சி எடுத்து வருகிறார்.

இந்நிலையில் அடுத்த உலகக்கோப்பை தொடரில் விளையாட ரோகித் சர்மாவுக்கு பி.சி.சி.ஐ. அறிவுரை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக வெளியான தகவலின் படி, ரோகித் தனது எதிர்காலம் குறித்த ஊகங்களுக்கு எதிர்வினையாற்றுவதைத் தவிர்த்து, அவரது உடற்தகுதி மற்றும் செயல்திறனில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்று பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com