கொல்கத்தா பிட்ச் விவகாரம்: கம்பீரை மறைமுகமாக விமர்சித்த ஹர்பஜன்

இந்தியா - தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட் நடந்த கொல்கத்தா பிட்ச் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
மும்பை,
கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் 3-வது நாளிலேயே படுதோல்வி அடைந்தது. 124 ரன் இலக்கை கூட துரத்த முடியாமல் இந்திய அணி 35 ஓவர்களில் வெறும் 93 ரன்னில் சுருண்டது.
பொதுவாக இந்திய ஆடுகளங்கள் (பிட்ச்) 4-வது நாளில் இருந்துதான் சுழலுக்கு ஒத்துழைக்கும். ஆனால் இந்த ஆடுகளத்தில் தொடக்க நாளிலேயே சுழற்பந்து வீச்சின் கை ஓங்கியது. அதுவும் 2-வது நாளில் பந்து தாறுமாறாக சுழன்று திரும்பியதால் பேட்ஸ்மேன்கள் திண்டாடி போனார்கள்.
ஆனால் இத்தகைய ஆடுகளத்தை கேட்டது நாங்கள்தான். இது ஒன்றும் விளையாட முடியாத அளவுக்கு மோசமான ஆடுகளம் கிடையாது. பேட்ஸ்மேன்கள் தடுப்பாட்டத்தில் நன்றாக செயல்பட்டு இருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்து இருந்தார்.
ஏற்கனவே கடந்த ஆண்டு சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இதே போன்ற ஆடுகளத்தை கேட்டு வாங்கி, உதை வாங்கியது கம்பீருக்கு நினைவில்லையா?. அவர் எப்போதுதான் திருந்துவார்? என முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் அவரை விமர்சித்து வருகிறார்கள்.
அந்த வரிசையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர் கூறுகையில், “இது போன்ற தரமற்ற ஆடுகளங்களால் டெஸ்ட் கிரிக்கெட்டை முற்றிலும் அழித்து விட்டார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்த வேண்டியதுதான். டெஸ்ட் வடிவத்துக்கு எந்த மதிப்பும் இருப்பதாக தெரியவில்லை. முற்றிலும் ஒரு தரப்புக்கு சாதகமாக ஆடுகளத்தை தயாரிக்கும் நடைமுறை பல ஆண்டுகளாக தொடருகிறது.
அது தவறான நடைமுறை. இது போன்ற ஆடுகளங்களில் நீங்கள் வெற்றி பெற்று இருப்பீர்கள். ஆனால் உண்மையான பலன் எதுவும் கிடைக்காது. இதன் மூலம் ஒரு கிரிக்கெட் வீரராக எந்த முன்னேற்றமும் காண முடியாது. இதை சரிசெய்ய வேண்டிய நேரம் இது” என்று கூறினார்.






