ஒருநாள் கிரிக்கெட்: உலக சாதனை படைத்த இங்கிலாந்து அணி

image courtesy:ICC
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து 342 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சவுத்தம்டான்,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நடைபெற்ற முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி சவுத்தம்டானில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 414 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜேக்கப் பெத்தேல் 110 ரன்களும், ஜோ ரூட் 100 ரன்களும் அடித்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் கார்பின் போஷ் மற்றும் கேஷவ் மகராஜ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணி, இங்கிலாந்து பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20.5 ஓவர்களில் 72 ரன்னில் சுருண்டது. இதனால் இங்கிலாந்து அணி 342 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது.
இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற மாபெரும் உலக சாதனையை இங்கிலாந்து படைத்துள்ளது.
அந்த பட்டியல்:
1. இங்கிலாந்து - 342 ரன்கள்
2. இந்தியா - 317 ரன்கள்
3. ஆஸ்திரேலியா - 309 ரன்கள்
4. ஜிம்பாப்வே - 304 ரன்கள்
5. இந்தியா - 302 ரன்கள்






