பந்து பழையதாகும்போது சிராஜின் செயல்பாடு தாக்கம் தருவதாக இல்லை - ரோகித் சர்மா

Image Courtesy: AFP
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் முகமது சிராஜ் இடம் பெறவில்லை.
மும்பை,
8 அணிகள் கலந்து கொள்ளும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்கி மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. இந்த தொடருக்கான அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், குரூப் பி-யில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இதையடுத்து, இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் இடம் பெறவில்லை.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் முகமது சிராஜ் இடம் பெறாதது ஏன்..? என்பது குறித்து கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஜஸ்ப்ரீத் பும்ரா உடல்நிலை குறித்து பி.சி.சி.ஐ மருத்துவ குழுவிடமிருந்து நாங்கள் அறிக்கைக்காக காத்திருக்கிறோம். அது பிப்ரவரி மாத துவக்கத்தில் வந்து விடும். பும்ராவின் நிலைமை தெளிவாகத் தெரியவில்லை. எங்களுக்கு அனைத்து வகையான சூழ்நிலைகளிலும் அசத்தக்கூடிய பவுலர்கள் தேவை.
துரதிஷ்டவசமாக சிராஜ் அதிகமாக புதிய பந்தை சார்ந்து இருக்கிறார். நாங்கள் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் விளையாடுவதை விரும்புகிறோம். பழைய பந்தில் பவுலிங் செய்யும் போது அவருடைய தாக்கம் குறைந்து விட்டது. ஆனால், புதிய பந்தில் ஏற்படுத்தும் தாக்கம் போலவே மிடில் மற்றும் கடைசி கட்ட நேரங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் பவுலர்களுக்கு நாங்கள் முன்னுரிமை கொடுக்கிறோம். அந்த வகையில் ஜஸ்ப்ரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஷமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் தேர்வால் நாங்கள் சரியான சமநிலையை கண்டறிந்துள்ளோம் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.