வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி


வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி
x

image courtesy:BCCI

இந்தியா-இங்கிலாந்து ஜூனியர் அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

நார்த்தம்டான்,

இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி (19 வயதுக்குட்பட்டோர்) இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்ற நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் போட்டி நார்த்தம்டானில் நேற்று நடைபெற்றது. மழை காரணமாக 40 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன பிஜே டாகின்ஸ் 62 ரன்களும், ஐசக் முகமது 42 ரன்களும் அடித்து அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். இறுதி கட்டத்தில் கேப்டன் தாமஸ் ரியூ அதிரடியாக விளையாடி 76 ரன்கள் (44 பந்துகள்) அடிக்க இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 268 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் கனிஷ்க் சவுகான் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 269 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வைபவ் சூர்யவன்ஷி-ஆயுஷ் மாத்ரே களமிறங்கினர். இதில் ஆயுஷ் மாத்ரே 12 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். இருப்பினும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன வைபவ் சூர்யவன்ஷி இங்கிலாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். வெறும் 20 பந்துகளில் அரைசதமடித்து அசத்தினார்.

ருத்ரதாண்டவம் ஆடிய அவர் வெறும் 31 பந்துகளில் 9 சிக்சர்கள் 6 பவுண்டரிகள் உள்பட 86 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த விஹான் மல்கோத்ரா 46 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்வரிசையில் கனிஷ்க் சவுகான் (43 ரன்கள்), ஆம்ப்ரிஷ் (31 ரன்கள்) ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வெறும் 34.3 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

1 More update

Next Story