பாகிஸ்தானுக்கு எதிராக இதை செய்வாரா..? சூர்யகுமார் யாதவை விமர்சித்த இந்திய முன்னாள் வீரர்


பாகிஸ்தானுக்கு எதிராக இதை செய்வாரா..? சூர்யகுமார் யாதவை விமர்சித்த இந்திய முன்னாள் வீரர்
x

யுஏஇ அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவின் செயல் ரசிகர்கள் மத்தியில் பாராட்டினை பெற்றது.

மும்பை,

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை 57 ரன்னில் சுருட்டி எளிதில் வெற்றியை வசப்படுத்தியது. இந்த ஆட்டத்தில் யுஏஇ பேட்டிங் செய்தபோது 13-வது ஓவரை இந்திய ஆல் ரவுண்டர் ஷிவம் துபே வீசினார். அந்த ஓவரில் துபே வீசிய 3-வது பந்தை எதிர்கொண்ட ஜூனைத் சித்திக் அடிக்க முயற்சித்த போது, அது விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனின் கைக்கு சென்றது. பந்தை தவற விட்ட சித்திக், துபேவின் இடுப்பில் இருந்த டவல் கீழே விழுந்ததை சுட்டிக்காட்டினார்.

ஆனால் அந்த சமயத்தில் அவர் கவனக்குறைவாக கிரீசை விட்டு சற்று வெளியே நின்றார். இதனை கவனித்த சஞ்சு சாம்சன் உடனடியாக ஸ்டம்பு மீது பந்தை எறிந்து அவுட் கேட்டார். ரீப்ளேவுக்கு பிறகு 3-வது நடுவரும் அவுட் என தீர்ப்பளித்தார். ஆனால் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் இது உண்மையான விளையாட்டின் உத்வேகத்துக்கு நல்லதல்ல என கூறி அப்பீலை வாபஸ் பெறுவதாக கள நடுவர்களிடம் கூறினார். இது ரசிகர்கள் மத்தியில் பாராட்டினை பெற்றது.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் இதேபோல் செய்வாரா? என்று இந்திய முன்னாள் வீரர ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “இது ஒரு குறிப்பிட்ட நிகழ்வுக்கு உரியது என்று நான் கருதுகிறேன். ஒருவேளை இதே நிகழ்வு பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி சமநிலையில் இருக்கும்போது அந்த அணியின் கேப்டன் சல்மான் ஆஹாவுக்கு எதிராக நடைபெற்றிருந்தால் சூர்யகுமார் இதை செய்வாரா?. நிச்சயம் செய்யமாட்டார். அந்த சமயத்தில் சஞ்சு சாம்சன் நல்ல விழிப்புணர்வுடன் செயல்பட்டார். என்னைப் பொறுத்த வரை பேட்ஸ்மேன் வெள்ளைக் கோட்டைக்கு வெளியே நின்றால் அவுட். இது விதிகளுக்குட்பட்டது, நடுவர் ஆட்டமிழந்ததாக அறிவித்துவிட்டார், பிறகு வெளியே இருங்கள்.

ஆனால் இந்தக் கருத்து மாறுபடும். பிரச்சினை என்னவெனில் நீங்கள் நெறிமுறைகளையும் தாராள மனப்பான்மையும் கொண்டு வரும்போது அதிகமான விவாதங்கள் வரும். இப்போதும் கூட இன்று இதை செய்த சூர்யகுமார் நாளை ஏன் அதை செய்யவில்லை? அதே வழியில் ஏன் செல்லவில்லை? என்ற பேச்சுக்கள் வரலாம்” என்று கூறினார்.

1 More update

Next Story