இளையோர் டெஸ்ட்: இங்கிலாந்துக்கு எதிராக வலுவான நிலையில் இந்தியா

இந்திய அணியின் 2-வது இன்னிங்சில் சூர்யவன்ஷி அரைசதம் அடித்தார்.
பெக்கன்ஹாம்,
இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி (19 வயதுக்குட்பட்டோர்) இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (4 நாட்கள்) தொடர் நடைபெறுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெக்கன்ஹாமில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 112.5 ஓவர்களில் 540 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆயுஷ் மாத்ரே 102 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் அலெக்ஸ் கிரீன் மற்றும் ரால்பி ஆல்பர்ட் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 114.5 ஓவர்களில் 439 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ராக்கி பிளிண்டாப் 93 ரன்களிலும், ஹம்சா ஷேக் 84 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஹெனில் படேல் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 101 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன சூர்யவன்ஷி - ஆயுஷ் மாத்ரே நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். அதிரடியாக விளையாடிய சூர்யவன்ஷி 56 ரன்களிலும், ஆயுஷ் மாத்ரே 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சாவ்டா 3 ரன்களில் ஆட்டமிழந்தார். 3-வது நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் அடித்து மொத்தம் 229 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. விஹான் மல்ஹோத்ரா 34 ரன்களுடனும், அபிக்யான் குண்டு ரன் எதுவுமின்றியும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சி வாகன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
இன்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.






