ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்ற ஜூனியர் மகளிர் அணி.. பரிசுத்தொகை அறிவித்த இந்திய கால்பந்து சம்மேளனம்

image courtesy:twitter/@IndianFootball
20 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி ஜூனியர் மகளிர் ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது.
யாங்கோன்,
12-வது ஜூனியர் மகளிர் ஆசிய கோப்பை கால்பந்து தொடர் (20 வயதுக்கு உட்பட்டோர்) அடுத்த ஆண்டு தாய்லாந்தில் நடக்கிறது. இந்த போட்டிக்கான தகுதி சுற்று பல்வேறு இடங்களில் நடந்தது.
இதில் மியான்மரில் உள்ள யாங்கோன் நகரில் நேற்று நடந்த ‘டி’ பிரிவு கடைசி லீக்கில் இந்திய அணி மியான்மர் உடன் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் மியான்மரை தோற்கடித்து ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்றது. பூஜா 27-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
இந்திய அணி, 20 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு முன்னேறுவது கடந்த 20 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.
இந்நிலையில் வரலாறு படைத்த இந்திய மகளிர் அணியினருக்கு ரூ.21.90 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என அகில இந்திய கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.






