அட்லாண்டிக் - பசிபிக் பெருங்கடலை தனியாக விமானத்தில் கடந்த முதல் பெண்!


அட்லாண்டிக் - பசிபிக் பெருங்கடலை தனியாக விமானத்தில் கடந்த முதல் பெண்!
x

உலகின் மிகப்பெரிய கடல்களான பசிபிக் மற்றும் அட்லாண்டிக் ஆகிய இருகடல்களை தனிவிமானத்தில் பறந்து கடந்திருக்கிறார், ஆரோஹி. இந்தியாவின் மும்பையை சேர்ந்தவரான இவர், 2019-ம் ஆண்டு அட்லாண்டிக் கடலையும், சமீபத்தில் பசிபிக் கடலையும் கடந்து, சாதனை படைத்திருக்கிறார். இதுபற்றி, அவர் மனம் திறக்கிறார்.

''எனக்கு உலகின் மிகப்பெரிய கடலான பசிபிக்கை கடக்கத்தான் ஆசை. ஆனால் அதற்கு முன்பாக, உலகின் இரண்டாவது பெரிய கடலான அட்லாண்டிக் கடலை கடக்க ஆசைப்பட்டேன். அதன்படி 2019-ம் ஆண்டு சுமார் 10 கோடி சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் விரிந்திருக்கும் இந்தக் கடலை சிறு விமானத்தில் கடக்க தயாராகினேன்.

கேட்பதற்கு வேண்டுமானால் இந்த செய்தி சாதாரணமாக தெரியலாம். ஆனால் அட்லாண்டிக் கடலானது, பூமியின் 20 சதவீத நிலப்பரப்பையும், 29 சதவீத நீர்ப்பரப்பையும் தன்னகத்தே கொண்டது.

ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்காவின் அரணாக இருப்பதே அட்லாண்டிக் கடல்தான். கப்பல் மூலம் இந்தக் கடலை ஒரு சுற்று சுற்றி வர ஒரு யுகமே தேவை.

கடலுக்குள் கப்பலில் பயணிப்பது என்பது ஒரு தனி அனுபவம் என்றால் கடலின் மேற்பரப்பில் ஒரு குட்டி விமானத்தில் பறப்பது பேரனுபவம்.

கடினமான காலநிலையைத் தாங்கும் உடலும், மன உறுதியும், விமானத்தைத் திறமையாக ஓட்டும் திறனும், அதனுடன் சாகசத்தின் மீது தீராத வேட்கையும் இருந்தால் மட்டுமே கடலின் மேற்பரப்பில் விமானத்தை இயக்கி இந்தப் பேரனுபவத்தைத் தன்வசமாக்க முடியும். அதிர்ஷ்டவசமாக, இவை அனைத்துமே எனக்குள் இருந்தன'' என்கிறார், ஆரோஹி.

மும்பையைச் சேர்ந்த இளம்பெண்ணான இவர் சாகசத்தின் மீது தீராத காதல் கொண்டவர். திறமையான விமானி. அதனால்தான் 2019-ம் ஆண்டு மே மாதம் குறைந்த எடையுள்ள ஒரு குட்டி விமானத்தின் மூலம் அட்லாண்டிக் கடலைக் கடந்தார். அதுவும் தனியாக.

உலகிலேயே முதல் முறையாக ஒரு பெண் அட்லாண்டிக் கடலை விமானத்தின் மூலம் கடப்பது வரலாற்றில் அதுவே முதல் முறை. பல்வேறு தரப்புகளிலிருந்தும் ஆரோஹிக்கு பாராட்டுகள் குவிந்தன. அதையெல்லாம் பொருட்படுத்தாத ஆரோஹி, அடுத்தக்கட்ட சாகச பயணத்திற்கு தயாரானார். இம்முறை, உலகின் மிகப்பெரிய கடலான பசிபிக் கடலை கடப்பது என முடிவு செய்தார்.

சமீபத்தில் பசிபிக் பெருங்கடலையும் குட்டி விமானத்தில் கடந்து அட்லாண்டிக் மற்றும் பசிபிக்கை விமானத்தில் தனியாகக் கடந்த முதல் பெண் என்ற சாதனையையும் தன்வசமாக்கிவிட்டார்.

''அட்லாண்டிக்கை விட பசிபிக் மீதான பயணம் மிகவும் அழகானது. என்னுடைய முயற்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. விமான பிரிவுகளில் புதுமையான சாதனைகளை படைத்துக்கொண்டே இருக்க ஆசைப்படுகிறேன்'' என்கிறார் ஆரோஹி.

''என் நாட்டுக்கும் வீட்டுக்கும் என்னால் பெருமை கிடைத்திருப்பதை பெரும் கவுரவமாகக் கருதுகிறேன். என்னுடைய இந்த சாகசம் பெண்களுக்குத் தன்னம்பிக்கையையும், எதிலும் துணிந்து இறங்குகிற உத்வேகத்தையும் கொடுக்கும் என்று நம்புகிறேன்.

கடலின் மீது விமானத்தில் பறக்கும்போது இயற்கை எவ்வளவு ஆச்சரியமானது என்பதை துல்லியமாக உணர முடியும். கடலின் முன்பு நானும் விமானமும் ஒரு தூசி என்பதை உணர்ந்தேன். சில இடங்களைக் கடக்கும்போது இந்த உலகில் இவ்வளவு அழகான இடங்கள் இருக்கின்றனவா என்று வியந்தேன்...'' என்கிற ஆரோஹிக்கு வயது 25.


Next Story