சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்யலாமா?


சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்யலாமா?
x

உணவு உட்கொண்ட பிறகு சிறிது தூரம் நடைப்பயிற்சி செய்வது நல்லது என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. இந்த பழக்கம் பழங்காலம் முதலே உலகெங்கிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.

சாப்பிட்டதும் நிதானமாக சிறிது நேரம் உலவுவது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும். அத்தகைய நடைப்பயிற்சியை ஏன் மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான காரணங்களை பார்ப்போம்.

செரிமானத்திற்கு உதவும்:

உணவு உட்கொண்டதும் நிதானமாக நடைப்பயிற்சியில் ஈடுபடுவது செரிமான அமைப்பின் செயல்பாடுகளை தூண்டிவிட உதவும். குறிப்பாக செரிமான பாதைக்கு இடையூறாக இருப்பவற்றை நிவர்த்தி செய்து உணவு தடையின்றி செரிமானமாக ஊக்குவிக்கும். நடக்கும்போது செரிமான செயல்பாடுகள் சுமுகமாக நடப்பதால் உணவில் இருக்கும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் முழுவதையும் உடல் உறிஞ்சும் செயல்முறையும் சீராக நடைபெறும். உணவு உண்டபின் நடப்பதன் மூலம் வயிற்று உப்புசம், அஜீரணம் போன்றவற்றுடன் தொடர்புடைய அசவுகரியங்களையும் தவிர்க்கலாம்.

ரத்த சர்க்கரை அளவை பராமரிக்கும்:

ரத்தத்தில் சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துவதில் உணவுக்கு பிந்தைய நடைப்பயிற்சிக்கு முக்கிய பங்கு இருக்கிறது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த பலனை கொடுக்கும். இன்சுலின் உணர்திறனை அதிகரிக்க செய்து குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்திலும் அதன் செயல்பாட்டை ஊக்குவிக்கும். இதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவில் ஏற்படும் திடீர் மாற்றம் கட்டுப்படுத்தப்படும்.

வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும்:

உணவுக்கு பிந்தைய நடைப்பயிற்சி உடல் இயக்கங்களை தூண்டி வளர்சிதை மாற்றத்திற்கும் வழிவகுக்கும். இந்த மென்மையான உடற்பயிற்சி கலோரிகள் அதிகம் எரிக்கப்படுவதற்கும் தூண்டுதலாக அமையும். உடல் எடையை சீராக பேணுவதற்கும் இந்த நடைப்பயிற்சி உதவும்.

மனநிலையை மேம்படுத்தும்:

சாப்பிட்ட பிறகு நடப்பது எண்டோர்பின்களின் வெளியீட்டைத் தூண்டும். நல்ல ஹார்மோன்கள் என்று அழைக்கப்படும் இது மன அழுத்தத்தை திறம்பட குறைக்கும் ஆற்றல் கொண்டது. மனநிலையையும் விரைவாக மேம்படுத்தக்கூடியது. உணவு உட்கொண்ட பிறகு நடைப்பயிற்சி செய்வது சோர்வை போக்கி புத்துணர்ச்சியை தூண்டிவிடவும் செய்யும்.

உடல் எடையை நிர்வகிக்கும்:

சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்யும் பழக்கத்தை தொடர்ந்து பின்பற்றி வந்தால் உடல் எடையை சீராக நிர்வகிக்க முடியும். இந்த நடைப்பயிற்சி கலோரிகளை எரிப்பதற்கு ஊக்குவிப்பதன் மூலம் உடல் எடை அதிகரிப்பதை தடுக்கும். பசி ஹார்மோன்களின் செயல்பாட்டையும் ஒழுங்குபடுத்தும். அதனால் சாப்பிட்டதும் நடைப்பயிற்சி செய்வது உடல் எடையை சீராக பராமரிக்கவும், உடல் எடையை குறைக்கவும் வித்திடும்.

இதய நலன் காக்கும்:

நடைப்பயிற்சி உள்ளிட்ட உடல் செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபடுவது இதய நலனை காக்க துணைபுரியும். அதிலும் சாப்பிட்டதும் நடக்கும் பழக்கத்தை பின்பற்றுவது கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம் குறைவதற்கு வழிவகுத்து ஒட்டுமொத்த இதய செயல்பாட்டை மேம்படுத்தும். உணவு உட்கொண்ட பிறகு குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் நடப்பது நல்லது.


Next Story