கரும்பு ஜூஸ் ஏன் பருக வேண்டும்?


கரும்பு ஜூஸ் ஏன் பருக வேண்டும்?
x
தினத்தந்தி 13 April 2023 2:45 PM GMT (Updated: 13 April 2023 2:45 PM GMT)

கரும்பு சாற்றில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சி மற்றும் ஆன்டி ஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ளது. இவை உடலுக்கு தேவையான ஆற்றலை அளித்து ஆரோக்கியத்தை பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

தாகத்தை தணிப்பதற்கு சிறந்த பானமாகவும் கரும்பு சாறு விளங்குகிறது. கரும்பு சாற்றை ஏன் பருக வேண்டும் என்பதற்கான பிற காரணங்கள் குறித்து பார்ப்போம்.

மஞ்சள் காமாலைக்கு தீர்வளிக்கும்:

ஆயுர்வேதத்தின் படி, கரும்பு இயற்கையான குளிர்ச்சித்தன்மை கொண்ட பொருளாகும். இது கல்லீரலை வலுப்படுத்தக்கூடியது. மஞ்சள் காமாலை நோய் நெருக்கவிடாமல் பாதுகாக்கும் ஆற்றல் கொண்டது. மஞ்சள் காமாலை நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் விரைவில் குணமாகுவதற்கும் துணைபுரியக்கூடியது. எந்தவகை நோய்பாதிப்பின்போதும் இழந்த புரதங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை ஈடு செய்வதற்கு கரும்பு சாறு உதவக்கூடியது.

நோய்த்தொற்றுகளை தடுக்கும்:

கரும்பு சாறு டையூரிடிக் பண்புகளை கொண்டது என்பதால் உடலில் இருந்து நச்சுகள் மற்றும் தொற்றுகளை அகற்ற உதவுகிறது. தொடர்ந்து கரும்பு சாறு பருகுவதன் மூலம் சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் உணர்வையும் கரும்புச்சாறு போக்கும். கரும்பு சாறில் கொலஸ்ட்ரால் துளியும் இல்லை. சோடியமும் குறைவாகவே இருக்கிறது. சிறுநீரகங்களை பாதுகாப்பதில் கரும்பு சாறுக்கு முக்கிய பங்கு உண்டு.

செரிமானத்தை மேம்படுத்தும்:

செரிமான மண்டலம் சீராக இயங்கவும், வயிற்றில் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கவும் கரும்பு சாறு உதவும். மலச்சிக்கல் பிரச்சினைக்கும் தீர்வளிக்கும்.

எலும்புகளை வலுவாக்கும்:

கரும்புச் சாற்றில் உள்ளடங்கி இருக்கும் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் பொட்டாசியம் போன்றவை எலும்புகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கவும் முடியும். வயது அதிகரிக்கும்போது ஏற்படும் எலும்பு பலவீனத்தை போக்கி, எலும்புகளை வலுவாக வைத்திருக்க மருத்துவரிடம் ஆலோசனை பெற்று தினமும் ஒரு டம்ளர் கரும்புச்சாறு பருகி வரலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்:

கரும்பு சாற்றை தவறாமல் உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும். குறிப்பாக கோடை கால மாதங்களில் நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமடையும். அதனை சரிபடுத்த தினமும் ஒரு டம்ளர் கரும்பு ஜூஸ் பருகுவது நல்லது. மேலும் கரும்பு சாறில் ஆன்டி ஆக்சிடெண்டுகள் மற்றும் வைட்டமின் சி நிறைந்திருப்பதால் செரிமான கோளாறுகள், கல்லீரல் நோய்கள் மற்றும் சுவாசம் சார்ந்த நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவும்.


Next Story