சகோதர உறவு பலப்படும் நாள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வீட்டுத் தேவைகளைப் பூர்த்திசெய்து மகிழ்வீர்கள். புதியவாகனம் வாங்கும் திட்டம் நிறைவேறும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.
13.12.2019 முதல் 19.12.2019 வரை
கலைகளில் விருப்பம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே!
உத்தியோகத்தில் உள்ளவர்கள், இடமாற்றம் கோரி விண்ணப்பம் செய்ய வேண்டிய அவசியமில்லை. உங்களுடன் பணியாற்றும் சிலர் இடமாற்றம் பெற்றுச் செல்வதே உங்கள் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் அமைந்து விடும். தொழில் செய்பவர்களுக்கு, வேலைப்பளு அதிகரிக்குமே தவிர, ஊதியத்தில் உயர்வு இருக்காது. இருப்பினும் கவலை வேண்டாம். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளைப் பெறுவதுடன் பொருளாதார வகையிலான முன்னேற்றத்தையும் காண்பார்கள். மாணவர்கள் ஆரம்பத்தில் குழப்பமான மனநிலையில் காணப்பட்டாலும், பின்னர் உற்சாகத்தைப் பெறுவார்கள். அரசியல்வாதிகள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, பல நன்மைகளை குறைவின்றி பெறுவீர்கள். அதற்குரிய சலுகைகளை தலைமை உங்களுக்கு வழங்கும். வியாபாரிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படும் வகையில் வியாபாரம் நடைபெறும். அதே நேரத்தில் பொருட்களை அதிக அளவில் இருப்பு வைப்பதைத் தவிர்ப்பது நல்லது.
பெண்களுக்கு குடும்பத்தினரிடம் மட்டுமின்றி வெளிவட்டாரத்திலும் நற்பெயர் கிடைக்கும். குடும்பத்தில் சுமுகமான போக்கு நிலவி வரும். செலவுகள் அதிகரிக்கும் என்பதால், நிதிநிலையில் ஓரளவு நெருக்கடி நிலை வரக்கூடும். எனினும் தேவைகள் எப்படியும் நிறைவேறிவிடும். அரசாங்கத்தாலோ, அரசியல்வாதிகளாலோ எந்த நன்மையும் ஏற்படாது. அதிர்ஷ்ட வாய்ப்புகளில் அதிக ஈடுபாடு காட்டாதீர்கள். உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு அலைச்சலைக் குறைப்பது நல்லது. புத்திர வகையில் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு.
இந்த வாரம் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபாடு செய்தால் சிரமங்கள் மறையும்.
கார்த்திகை மாத ராசி பலன்கள்
17-11-2019 முதல் 16-12-2019 வரை
குருப்பெயர்ச்சியால் குதூகலம்
விகாரி வருடம் கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதனும் இணைந்திருக்கிறார். குருவின் 5-ம் பார்வை உங்கள் ராசியின் மீது பதிகிறது. எனவே இந்த மாதம் எல்லா வழிகளிலும் நன்மைகளைக் கொடுக்கும் மாதம் என்றே கருதலாம். குடும்ப முன்னேற்றம் கூடுதலாகக் கிடைக்கும். கொடுக்கல் - வாங்கல்கள் திருப்திகரமாக இருக்கும்.
‘குரு பார்க்க கோடி நன்மை’ என்பதற்கேற்ப தற்சமயம் நடந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாகவே இருக்கிறது. உத்தியோகம், தொழிலில் உன்னத நிலையை காண்பீர்கள். தடைப்பட்ட காரியங்கள் தானாக நடை பெறும். குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.
சப்தம ஸ்தானம் எனப்படும் களத்திர ஸ்தானம், குடும்பம் பற்றி அறிந்து கொள்வது மட்டுமல்லாமல் சுற்றம், நட்பு, அரசு விருது, சமூக அந்தஸ்து, வெளிநாட்டு முயற்சி, பயணத்தால் பலன், ஆடை - ஆபரண சேர்க்கை, தம்பதியரின் ஒற்றுமை ஆகியவற்றைப் பற்றியெல்லாம் விளக்கும் இடமாகும். அப்படிப்பட்ட இடத்தில் வெற்றிகள் ஸ்தானாதிபதி புதனுடன் உங்கள் ராசிநாதன் செவ்வாயும் இணைந்து சஞ்சரிப்பதால் சிறப்பான பலன் கிடைக்கப்போகிறது. குறிப்பாக சொத்துக்கள் வாங்கும் யோகம் முதல் சொந்தங்கள் வாழ்த்தும் யோகம் வரை ஏற்படும். அத்தனை காரியங்களும் அடுக்கடுக்காக நடைபெறும். உடன்பிறப்புகளின் இல்லத் திருமண விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். உங்கள் பணியைப் பாராட்டியும், திறமையை மதித்தும் வெளிநாட்டில் இருந்து கூட அழைப்பு கள் வரலாம். ஊதிய உயர்வோடு, இருக்கும் இடத்திலேயே ஒருசிலருக்கு நல்ல வாய்ப்புகளும் வந்து சேரும்.
இம்மாதம் திருக்கார்த்திகைத் திருநாள் வருவதால், அன்றைய தினம் முழுவதும் விரதமிருந்து இறைவனை வழிபட்டால், எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் முன்னேற்றம் ஏற்படும்.
தனுசு சுக்ரன் சஞ்சாரம்
இதுவரை உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் சஞ்சரித்து வந்த சுக்ரன், நவம்பர் 22-ந் தேதி ஒன்பதாம் இடமான தனுசு ராசிக்கு செல்கிறார். அங்கு குருவோடு இணைந்து முரண்பாடான கிரக சேர்க்கை உருவாகிறது. குருவும், சுக்ரனும் இணைந்து சஞ்சரிக்கிற பொழுது திட்டமிட்ட காரியங்கள் நடைபெறாவிட்டாலும், திட்டமிடாத காரியங்களில் வெற்றி கிடைக்கும். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 9-ல் சஞ்சரிக்கும் பொழுது வாகன யோகம் முதல் வளர்ச்சிக்குரிய அனைத்து யோகங்களையும் வழங்குவார்.
விருச்சிக புதன் சஞ்சாரம்
இதுவரை சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த புதன், டிசம்பர் 3-ந் தேதி முதல் அஷ்டம ஸ்தானமான விருச்சிக ராசியில் அடியெடுத்து வைக்கப் போகிறார். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். மாமன், மைத்துனர் வழியில் மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும். சேமிப்பு உச்சநிலையை அடையும். சில மாதங்களாக நடைபெறாத ஒருசில காரியங்கள், இப்பொழுது துரிதமாக நடைபெறத் தொடங்கும். உடல்நலம் சீராக மாற்று மருத்துவம் உங்களுக்கு கைகொடுத்து உதவும். இக்காலம் உங்களுக்கு ஒரு இனிய காலமாகவே அமையப் போகிறது. ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம். வழக்குகள் சாதகமாக அமையும்.
வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டிகள் விலகும். இம்மாதம் செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமான் சன்னிதிக்குச் சென்று கந்தசஷ்டி கவசம் பாடி வழிபட்டால் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- நவம்பர்: 18, 20, 29, 30, டிசம்பர்: 4, 5, 11, 12, 15, 16
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- இளஞ்சிவப்பு.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் நீண்ட நாளையக் கனவு நனவாகப் போகிறது. நேசிப்பவர்களின் எண்ணிக்கை கூடும். குரு பார்வையால் அதிர்ஷ்டத்தின் அளவு அதிகரிக்கும். கணவன் - மனைவி ஒற்றுமை பலப்படும். எதையும் திட்டமிட்டுச் செய்து வெற்றி காண்பீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. தாய்வழி ஆதரவு திருப்தி தரும். கல்யாண முயற்சிகள் கைகூடுவது மட்டுமல்லாமல், குருவின் பஞ்சம பார்வையால் நெஞ்சம் மகிழும் சம்பவங்கள் நிறையவே நடைபெறப்போகிறது. பிள்ளை களுக்கு வேலை கிடைத்து உதிரி வருமானம் வந்து சேரும். மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும். பணிபுரியும் பெண்களுக்கு அனு கூலம் உண்டு. திறமை பளிச்சிடும். கேட்ட சலுகைகள் கிடைக்கும். உத்தியோக உயர்வால் உன்னத நிலையை அடைவீர்கள். குருபகவான் வழிபாடு குழப்பங்களைத் தீர்க்கும்.
2019-ம் ஆண்டு புத்தாண்டு பலன்கள்
1-1-2019 முதல் 31-12-2019 வரை
அசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ
உள்ளவர்களுக்கு)
இரண்டாம் இடத்தைப் பார்க்கும் குருவால் திரண்ட செல்வம் தேடிவரும்!
தைரியமும், தன்னம்பிக்கையும் கொண்ட மேஷ ராசி நேயர்களே!
நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த புத்தாண்டு வந்துவிட்டது. உங்கள் எண்ணங்கள் ஈடேறும் விதத்தில் கிரக நிலைகளின் சஞ்சாரம் இருக்கின்றது.
புத்தாண்டின் தொடக்க நிலை
புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். அவரை விருச்சிகத்தில் சஞ்சரிக்கும் குரு பார்க்கின்றார். எனவே குரு மங்கள யோகம் உண்டாகின்றது. மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் மற்றும் மழலையின் குரல் கேட்பதற்கான அறிகுறி வருடத் தொடக்கத்திலேயே அமையப் போகின்றது.
வருடம் தொடங்குகின்ற பொழுதே குருவின் பரிபூரண பார்வை வாக்கு, தனம், குடும்பம் ஆகிய இடங்களில் பதிவாகின்றதல்லவா? எனவே தன வரவு தாராளமாக வரும். குடும்ப முன்னேற்றம் கூடும்.
வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வதோடு மட்டுமல்லாமல் இல்லத்தில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளுக்கும் செலவிட்டு மகிழ்வீர்கள். பிரச்சினை செய்தவர்கள் எல்லாம் பின்வாங்கப் போகின்றார்கள். உங்களைப்பார்த்து முகம் சுளித்தவர்கள் எல்லாம் முன்னேற்றப் பாதைக்கு வழிவகுத்துக் கொடுக்கப் போகிறார்கள். வரன்கள் தேடி வரும்.
4-ல் ராகுவும், 10-ல் கேதுவும் சஞ்சரிக்கின்றார்கள். வருடம் தொடங்கிய சில நாட்களுக்கு இந்த கிரகங்களின் ஆதிக்கம் இருக்கின்றது. சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு, ஆரோக்கியப் பாதிப்புகளை ஏற்படுத்துமோ என்று நீங்கள் நினைக்க வேண்டாம். விருச்சிகத்தில் சஞ்சரிக்கும் குரு 9-ம் பார்வையாக சுக ஸ்தான ராகுவைப் பார்க்கின்றார். எனவே மாற்று மருத்துவங்களால் உடல்நலத்தைச் சீராக்கிக் கொள்வீர்கள். சொந்த வீட்டின் கட்டுமானப் பணிகள் பாதியில் நின்று போனதே என்ற கவலை இனி மாறும். முன்னோர்களின் சொத்துகள் கிடைப்பதில் இருந்த வில்லங்கங்கள் விலகும். கேதுவின் பலத்தால் வெற்றிகரமான திருப்பங்கள் ஏற்படும்.
9-ம் இடத்தில் சனி, சூரியன், புதன் ஆகிய மூன்று கிரகங்களும் சஞ்சரிக்கின்றார்கள். சனி மற்றும் புதன் கொஞ்சம் வலிமை இழந்திருக்கின்றார்கள். இருப்பினும் பிதுர்ரார்ஜித ஸ்தானத்தில் பிதுர்காரகன் சூரியன் சஞ்சரிப்பதால் பெற்றோர் வழியில் பிரியம் கூடும். உறவுகளில் இருந்த மனக் கசப்புகள் மாறி பாகப்பிரிவினைகளை உருவாக்கலாம்.
சப்தம ஸ்தானத்தில் சந்திரனும், சுக்ரனும் சஞ்சரிக்கின்றார்கள். 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன் பலம் பெற்றிருக்கின்றார். எனவே திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் அகலும். குடும்ப ஒற்றுமை பலப்படும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கவில்லையே, படித்து முடித்தும் சம்பாதிக்கவில்லையே என்று நினைத்தவர்களுக்கு இப்பொழுது எதிர்பார்த்த உத்தியோகம் கிடைத்து ஏற்றம் காண்பர். வெளிநாட்டு யோகம் கூட எண்ணியபடியே வந்து சேரலாம். தீர்த்த யாத்திரை செய்யும் யோகமும், திவ்ய தரிசனம் காணும் வாய்ப்புகளும் உருவாகும்.
ராகு-கேது பெயர்ச்சிக் காலம்
ஆண்டின் தொடக்கத்தில் 4-ம் இடத்தில் ராகுவும், 10-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கின்றார்கள். பின்னோக்கி நகர்ந்து செல்லும் கிரகம் என்று வர்ணிக்கப்படுகின்ற ராகுவும், கேதுவும் பிப்ரவரி 13-ந் தேதி மாற்றம்அடைகின்றன. 3-ல் ராகுவும், 9-ல் கேதுவும் சஞ்சரித்து முன்னேற்றப் பாதையில் நீங்கள் அடியெடுத்து வைக்க வழிகாட்டப் போகின்றது. கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த ராகுவால் குடும்பப் பிரச்சினைகள் கூடுதலாக ஏற்பட்டு மனக்கவலை உருவாகி இருக்கலாம். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காமல் போயிருக்கலாம். எப்பொழுது நல்ல திருப்பம் வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த உங்களுக்கு சகாய ஸ்தானத்திற்கு வரும் ராகுவால் அனைத்து வழிகளிலும் உங்களுக்கு சகாயம் கிடைக்கப் போகின்றது.
பண வரவு திருப்தி தரும். பரம்பரைச் சொத்துக்கள் வந்து சேரும். பாசம் மிக்கவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்களை இனம் கண்டுகொள்வீர்கள். வள்ளல்களின் ஒத்துழைப்போடு வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வீர்கள்.
9-ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் தந்தை வழி உறவினர்களின் பகை மாறும். தள்ளிப்போன வாய்ப்புகள் தானாக வந்து சேரும். விட்டுப் போன சொந்தங்கள் விரும்பி வந்து சேருவர்.
ெவளிநாட்டு யோகம் அதிவிரைவில் கைகூடும். கோவில் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். வைத்திருக்கும் வாகனம் பழுதாகி கவலை கொள்ள வைக்கின்றதே, புதிய வாகனம் வாங்கலாமா என்று சிந்தித்தவர்களுக்கு அது கைகூடும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இலாகா மாற்றங்களும், பதவி மாற்றங்களும் கூட வரலாம்.
இதுபோன்ற காலங்களில் ராகு-கேதுக்களுக்கு முறையான வழிபாடு களைச் செய்வது நல்லது.
குருப்பெயர்ச்சிக் காலம்
அக்டோபர் 28-ந் தேதி குருப் பெயர்ச்சி நிகழ இருக்கின்றது. ஆண்டின் தொடக்கத்தில் அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான், ஒன்பதாம் இடத்திற்குச் சென்று ஒளிமயமான எதிர்காலத்திற்கு உறுதுணை புரியப்போகின்றார். 9-ம் இடம் என்பது தகப்பனாரைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளும் இடமாகும். எனவே தந்தையின் உறவு, அவரால் கிடைக்கும் ஆதாயம், தந்தை வழிச் சொத்து சேர்க்கை, தர்ம சிந்தனை, தெய்வப் பற்று, தீர்த்த யாத்திரை, கடல்கடக்கும் யோகம், பாகப்பிரிவினை, நீண்டதூரப் பயணம் ஆகியவற்றைக் குறிக்கும் இடமாகும். அந்த இடங்கள் எல்லாம் புனிதமடைந்து புதிய வாழ்க்கை அமையப் போகின்றது.
குரு இருக்கும் இடத்தைக் காட்டிலும், பார்க்கும் இடத்திற்கு பலன் அதிகம் உண்டு. அந்த அடிப்படையில் 1, 3, 5 ஆகிய இடங்களை பார்க்கப் போவதால் தேக நலன் சீராகும். சேமிப்பு உயரும். உடன்பிறப்புகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். கடன் சுமை குறையும், புகழ், கீர்த்தி கூடும்.
குருவின் அதிசாரமும், வக்ரமும்
ஆண்டின் தொடக்கத்தில் விருச்சிகத்தில் சஞ்சரிக்கும் குரு, மார்ச் 13-ந் தேதி அதிசாரமாக தனுசு ராசிக்குச் செல்கின்றார். இடையில் விருச்சிகத்தில் வக்ரமாகவும் உலா வருகின்றார். அப்பொழுது திடீர் திடீரென நற்பலன்களை வழங்குவார். பிறக்கும் பொழுது குரு வக்ர இயக்கத்தில் இருப்பவர்களுக்கு இது நல்ல நேரமாகும்.
உங்கள் ராசியைப் பொறுத்தவரை 9,12-க்கு அதிபதியானவர் குரு பகவான். 12-க்கு அதிபதி வக்ரம் பெறும்பொழுது எண்ணிய காரியங்கள் எளிதில் நடைபெறும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். இடமாற்றங்கள் சாதகமாக அமையும்.
கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்
7.5.2019 முதல் 24.6.2019 வரை சனி - செவ்வாய் பார்வை காலமாகும். இக்காலத்தில் மிதுனச் செவ்வாயை தனுசு சனி பார்க்கின்றார். குரு வீட்டிலிருந்து சனி பார்த்தாலும் கூட, சனி மிகப்பலம்பெற்ற கிரகம் என்பதாலும், செவ்வாய்க்கு பகை கிரகம் என்பதாலும் மிகமிக கவனமுடன் செயல்பட வேண்டிய காலமாகும். ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். வாழ்வில் சில குறுக்கீடு சக்திகள் வந்து சேரும். மறைமுக எதிர்ப்புகளுக்கு மத்தியில் வாழ்க்கை அமையும். சேமிப்பு கரையலாம். உறவினர்களிடம் இருந்து கருத்து வேறுபாடு அதிகரிக்கும்.
5.6.2019 முதல் 29.6.2019 வரை ரிஷப சுக்ரனை விருச்சிக குரு பார்க்கின்றார். இதன் விளைவாக இடமாற்றங்கள், வீடு மாற்றங்கள், ஊர் மாற்றங்கள் வரலாம். விரயங்கள் அதிகரிக்கும். தொழில் பங்குதாரர்களால் தொல்லைகள் ஏற்படும். இதுபோன்ற காலங்களில் எதைச்செய்தாலும் அருகில் இருக்கும் சான்றோர்களை, ஆன்றோர்களை, ஆன்மிகப் பெரியோர்களை கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. மேலும் தேர்ந்தெடுக்கும் ஆலய வழிபாடுகளால் தெளிந்த சிந்தனையும், நம்பிக்கையும் கூடும்.
வளர்ச்சி தரும் வழிபாடு
செவ்வாய்க்கிழமை தோறும் கந்தசஷ்டி கவசம் படித்து முருகப்பெருமானை வழிபட்டு வருவது நல்லது. அனுகூலம் தரும் நாளில் குன்றக்குடியில் உள்ள அருள்மிகு சண்முகநாதப் பெருமானை வழிபட்டு சந்தோஷத்தை தக்க வைத்துக் கொள்ளுங்கள்.
சனியின் வக்ர காலம்
8.5.2019 முதல் 3.9.2019 வரை தனுசு ராசியில் பூராடம் நட்சத்திரக் காலில் சனி வக்ரம் பெறுகின்றார். இக்காலத்தில் தொழிலில் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. உங்கள் ராசிக்கு 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். எனவே தொழில் மற்றும் லாபம் பெறுவதில் சில தடைகளும், தாமதங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அருகில் உள்ளவர்களின் ஆதரவு குறைவாகவே கிடைக்கும். சொத்துத் தகராறுகள் மீண்டும் தலைதூக்கலாம். பிறரை நம்பி வெளிநாட்டுக்கு சென்றவர்கள் வெறும் கையோடு வீடு திரும்பும் வாய்ப்பு உருவாகும். புதியவர்களை நம்பிப் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். பிறருக்கு பொறுப்பு சொல்லி ஏதேனும் ஒரு தொகை வாங்கிக் கொடுத்தால் அதை நிறைவேற்ற முடியாமல் போகலாம். இக்காலத்தில் சனி பகவான் மற்றும் ஆதியந்தப் பிரபுவை வழிபட்டு வருவது நல்லது.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
மேஷ ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த புத்தாண்டில் வளர்ச்சி கூடுதலாக இருக்கும். வாய்ப்புகள் வந்து அலைமோதும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். குருவின் பார்வை குடும்ப ஸ்தானத்தில் பதிவதால் மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறும். வீடு வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். ராகு-கேது பெயர்ச்சிக்குப் பின்னால் உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கூடுதலாகக் கிடைக்கும். உங்களின் தன்னலமற்ற பணியைக் கண்டு பலரும் பாராட்டுவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் உள்ளம் மகிழும் விதம் கிடைக்கும். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு குடும்ப முன்னேற்றம் கூடும். தாய்வழி ஆதரவும், தக்க சமயத்தில் உடன்பிறப்புகள் கைகொடுத்து உதவும் சூழ்நிலையும் உருவாகலாம். சனி, செவ்வாய் பார்வை காலத்தில் மனக்கவலை அதிகரிக்கும். மக்கள் செல்வங்களால் பிரச்சினைகள் உருவாகும். சிந்தித்து செயல்பட்டால் வந்த துயர் விலகும்.
விகாரி வருட ராசிபலன்கள்
14.4.2019 முதல் 13.4.2020 வரை
(அசுவினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை)
பெயரின் முதல் எழுத்துக்கள் : சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கு)
மேஷ ராசி நேயர்களே,
விகாரி வருடம் பிறக்கும் பொழுதே குரு பகவான் உங்கள் ராசியைப் பார்க்கின்றார். உங்கள் ராசியிலேயே பஞ்சம ஸ்தானாதிபதி சூரியன் உச்சம் பெற்று சஞ்சரிக்கின்றார். உங்கள் ராசிநாதன் செவ்வாய் தன ஸ்தானத்தில் இருக்கின்றார். எனவே இந்த ஆண்டு உங் களுக்கு இனிய ஆண்டாக அமையப் போகின்றது. மேலும் சுக ஸ்தானத்தில் சந்திரன் சொந்த வீட்டில் சஞ்சரித்து சகடயோக அமைப்போடு கிரகங்கள் சாதக நிலையில் இருக்கின்றன.
வருடத் தொடக்கத்தில் 9-ம் இடத்தில் குரு, சனி, கேது ஆகிய மூன்று கிரகங்களும் சஞ்சரிக்கின்றன. தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியாக விளங்குபவர் சனிபகவான். அவர் பிதுர்ரார்ஜித ஸ்தானத்தில் குரு வீட்டில் சஞ்சரிக்கும் பொழுது நல்ல பலன்களையே வழங்குவார்.
செல்வ வளம் சிறப்பாக இருக்கும். சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு முன்னேற்றம் கூடுதலாக இருக்கலாம். ஆயில்யம் நட்சத்திரத்தில் இந்த ஆண்டு பிறக்கிறது. அந்த நட்சத்திரத்திற்கு அதிபதியான புதன் உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். அவர் ஆண்டின் தொடக்கத்தில் நீச்சம் பெற்றிருக்கின்றார். மேலும் 12-ம் இடத்தில் மறைந்தும் இருக்கின்றார். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும்.
6-க்குஅதிபதி நீச்சம் பெற்று 12-ல் இருப்பதால் விபரீத ராஜயோக அடிப் படையில் திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். திடீர் தனலாபங்களும் இடையிடையே வந்து சேரும். உதாசீனப்படுத்திய உறவினர்கள் உங்களைத்தேடி வருவர்.
தனுசு குருவின் சஞ்சாம்
(14.4.2019 முதல் 17.5.2019 வரையிலும், மீண்டும் 28.10.2019 முதல் 13.4.2020 வரையிலும்)
இக்காலத்தில் குருவினுடைய பார்வை உங்கள் ராசியில் பதிகின்றது. ஜென்ம ராசியில் குரு பார்வை பதியும் பொழுது நன்மைகள் ஏராளமாக நடைபெறும். வாழ்க்கைப் பாதையில் ஏற்பட்ட இடையூறுகள் அகலும். நண்பர்களும், உறவினர்களும் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பர்.
குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடை அகலும். காலம் காலமாகக் கல்யாணம் பேசியும் விட்டுப் போகின்றதே, வந்த வரன்கள் வாயிலோடு நிற்காமல் சிந்தை மகிழ எப்பொழுதுதான் இல்லறம் அமைய வழிபிறக்கும், என்றெல்லாம் சிந்தித்தவர்களுக்கு இப்பொழுது புதிய பாதை புலப்படப் போகின்றது.
எல்லாவற்றிற்கும் மேலாக ஆரோக்கியத் தொல்லையால் அடிக்கடி அவதிப்பட்டு வந்த நீங்கள் இப்பொழுது ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுவீர்கள். இதுவரை ரண சிகிச்சை செய்தால் தான் குணமாகும் என்று சொல்லிய மருத்துவர்கள், இப்பொழுது சாதாரண சிகிச்சையிலேயே குணமாகும் என்பார்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். கொடிகட்டிப் பறந்த பிரச்சினைகள் இப்பொழுது படிப்படியாக மாறும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட இப்பொழுது நல்ல வாய்ப்புகள் அடுக்கடுக்காக வந்து சேரும்.
சொத்துக்களை கிரயம் செய்வதில் இருந்த தடைகள் அகலும். வீடு, இடம் வாங்கும் யோகமும் உண்டு. இதயம் மகிழும் சம்பவங்கள் ஏராளமாக நடைபெறும். புத்திர பாக்கியத்திற்கு பரிகாரங்கள் செய்தும் இன்னும் பலன் கிடைக்கவில்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு இப்பொழுது சந்தோஷப்படும் விதத்தில் புத்திர பாக்கியங்கள் அமையும். அரசியலில் இருப்பவர்கள் நல்ல பதவிகளைப் பெறும் வாய்ப்பு வந்து சேரும்.
குருவின் பார்வை 3-ம் இடத்தில் பதிவதால் முன்னேற்றத்தின் முதல் படிக்கு செல்ல புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். சகோதரர்கள் பகை மாறிப் பாசம் காட்டுவர். அவர்களுடைய ஒத்துழைப்போடு தொழில் முன்னேற்றம் காண இயலும். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தை பெறுவீர்கள். உடன்பிறப்புகளின் இல்லத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளையும், சுபகாரியங்களையும் நீங்களே முன்னின்று நடத்தக்கூடிய சூழ்நிலை உருவாகும்.
தந்தை வழி சொத்துக்கள் மற்றும் முன்னோர் வழிச் சொத்துக்களில் பாகப்பிரிவினை சம்பந்தமாக முயற்சி செய்தவர்கள் இப்பொழுது எதிர்பார்த்த நற்பலன்களைக் காண்பர். மூத்த சகோதரர்களால் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் அகலும். தொழில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.
குருவின் பார்வை 5-ம் இடத்தில் பதிவதால் பூர்வ புண்ணியத்தின் பலனாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் அனைத்தும் கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். அவர்கள் கடல் தாண்டிச் சென்றுபடிக்க விரும்பினால் அதற்கான முயற்சியில் அனுகூலம் கிடைக்கும். திருமண வயதடைந்த பிள்ளை களாக இருந்தால் அதற்கான வரன்களை எதிர்பார்த்துக் காத்திருப்பவர் களுக்கு நல்ல வரன்கள் வந்து மகிழ்ச்சியை வரவழைத்துக்கொடுக்கும். புத்தி சாதுர்யத்தால் பல புது முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். சொத்துத் தகராறுகள் அகலும். வெளி நாட்டு வணிகத்திலும் ஆதாயம் கிடைக்கும்.
விருச்சிக குருவின் சஞ்சாரம்
(18.5.2019 முதல் 28.10.2019 வரை)
இக்காலத்தில் குரு பகவான் வக்ர இயக்கத்தில் விருச்சிக ராசிக்கு வருகின்றார். இதில் 7.8.2019 வரை வக்ர இயக்கத்திலும் இருக்கின்றார். இக் காலத்தில் குருவின் பார்வை 2, 4, 12 ஆகிய மூன்று இடங்களிலும் பதிகின்றது. எனவே வாக்கு, தனம், குடும்பம், உறவினர்களின் உறவு, இடமாற்றங்கள் போன்றவற்றில் எல்லாம் பார்வை பலத்தால் நற்பலன்கள் கிடைக்கப் போகின்றது. குடும்பத்தில் இதுவரை இருந்த பிணக்குகள் அகலும். பிடிவாத குணத்தோடு உங்களை விட்டுச்சென்ற சொந்தங்கள் மீண்டும் வந்து சேருவர். வருமான உயர்வுக்கு வழிவகுத்துக் கொள்வீர்கள். வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார் என்ற பழமொழிப்படி வீட்டையும் விரிவு செய்து கட்டமுடியவில்லையே, கல்யாண முயற்சியிலும் குறுக்கீடுகள் இருக்கின்றதே என்று கவலைப்பட்டவர்கள் இப்பொழுது சந்தோஷ வாய்ப்பு களை சந்திக்கப்போகிறார்கள். கட்டிய வீட்டைப் பழுதுபார்க்கும் சூழ்நிலை அல்லது வீட்டை விரிவு செய்து கட்டும் முயற்சி போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் பிள்ளைகள், உடன்பிறப்புகள் அல்லது குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும்.
புதிய வாகனம் வாங்கும் முயற்சிக்கு ஏதேனும் சலுகைகளை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு அதுவும் கைகூடும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம், கட்டிடத் திறப்புவிழாக்கள், கடைதிறப்பு விழாக்கள், பெற்றோர்களின் மணிவிழாக்கள் போன்ற சுபநிகழ்வுகள் உருவாகி வீடு களைகட்டத் தொடங்கும். மூட்டுவலி, முதுகுவலி, காதுவலி, கழுத்துவலி என்று வலிகளால் அவதிப்பட்டவர்கள் இப்பொழுது எளிய பரிகாரங்களை செய்தும், புதிய மருத்துவர்களைப் பார்த்தும் ஆரோக்கியத்தினைச் சீராக்கிக் கொள்வீர்கள்.
சனியின் சஞ்சார நிலை
ஆண்டு முழுவதும் சனிபகவான் 9-ம் இடத்தில் தனுசு ராசியிலேயே சஞ்சரிக்கின்றார். இடையில் 8.5.2019 முதல் 3.9.2019 வரை தனுசு ராசியில் வக்ரம் பெறுகின்றார். இந்தச் சனி ஆதிக்கத்தின் விளைவாக கொடுக்கல் வாங்கல்களில் இருந்த மந்த நிலை மாறும். கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்க புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள். பெற்றோர்களின் ஆதரவோடு பெருமைக்குரிய சம்பவங்கள் நிறைய நடைபெறும். நிலுவையில் இருந்த வழக்குகள் சாதகமாக முடியும்.
சனியின் பார்வை 6-ம் இடத்தில் பதிவதால் உத்தியோக மாற்றங்கள் உறுதியாகலாம். பணி நிரந்தரமாகவில்லையே என்று கவலைப்பட்டவர் களுக்கு பணிநிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும். தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியாக சனி விளங்குவதால் சகபணியாளர்களின் ஒத்துழைப்பும், பதவி உயர்வும் கிடைக்கலாம். சனியின் வக்ர காலத்தில் இழப்புகளையும், ஏமாற்றங்களையும் சந்திக்காமலிருக்க சிறப்பு வழி பாடுகளைச் செய்வது நல்லது.
ராகு-கேதுக்களின் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் ராகுவும், 9-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கின்றார்கள். எனவே, அடிப்படை வசதிகள் பெருகும். தொழிலில் ஆதாயம் கிடைக்கும். சகோதரர் களின் ஒத்துழைப்போடு புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்கு எண்ணியபடியே சென்று வருவீர்கள். தூர தேசத்திலிருந்து வரும் அழைப்புகளைப் பற்றிச் சிந்திப்பீர்கள். கைநழுவிய சந்தர்ப்பங்கள் கைகூடிவரும்.
சனி-செவ்வாய் பார்வைக்காலம்
(14.4.2019 முதல் 23.6.2019 வரை)
உங்கள் ராசிநாதன் செவ்வாயாக இருப்பதால் இக்காலத்தில் திசாபுத்தி பலம் இழந்தவர் களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில் சில தடைகள் ஏற்படலாம். உறவினர்களுக்கு நன்மை செய்யப்போய் அது தீமையில் முடியலாம். இக்காலத்தில் உங்களுக்கு மனோதைரியம் அதிகம் தேவை. பிறரது சூழ்ச்சிக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்வது
நல்லது. எந்த நிலையிலும் பொறுமை தேவை. குலதெய்வ வழிபாடும், இஷ்டதெய்வ வழிபாடும். சுயஜாதகப்படி திசாபுத்திக்கேற்ற சிறப்பு வழிபாடும் முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்க வழிகாட்டும்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
மேஷ ராசியில் பிறந்த பெண்களுக்கு ஆசைகள் நிறைவேறும் ஆண்டாகவே இந்த ஆண்டு அமையப்போகின்றது. ஓசைப்படாமலேயே சில நல்ல காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். வருடத் தொடக்கத்தில் குரு பார்வை இருப்பதால் நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். மனக் கசப்புகள் மாறும். தாயின் உடல்நலம் சீராகும். உடன்பிறப்புகள் உங்கள் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்புச் செய்வர். ஊர் மெச்சும் அளவிற்கு நல்ல பெயர் கிடைக்கும். குழந்தைகளின் சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும். பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உங்கள் திறமை பளிச்சிடுவதைக் கண்டு மேலதிகாரிகள் ஊதிய உயர்வும், உத்தியோக உயர்வும் வழங்க முன்வருவர். சனி செவ்வாய் பார்வை காலத்திலும், செவ்வாய் நீச்சம் பெறும் நேரத்திலும் யோகபலம் பெற்றநாளில் சிறப்பு பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது. குலதெய்வ வழிபாடும், சஷ்டி விரதமிருந்து சண்முகநாதரை வழிபடுவதன் மூலமும் சந்தோஷம் நிலைக்கும்.
வருடம் முழுவதும் வசந்தகாலமாக வழிபாடு
ஆனைமுகப் பெருமானையும், அனுமனையும் வழிபட்டு வாருங்கள். கணபதி கவசம் பாடி வழிபட்டால் மனஅமைதியும் கிடைக்கும். இல்லத்தில் மகிழ்ச்சியும் குடிகொள்ளும்.
19-12-2017 முதல் 28-03-2020 வரை
அசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை (பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்)
விலகிவிட்டது சனி! விரும்பியது நடக்கும் இனி!
மனதில் பட்டதை மறைக்காமல் சொல்லும் மகத்தான குணம் பெற்ற மேஷ ராசி நேயர்களே!
எந்தக் காரியத்தையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க நினைக்கும் உங்களுக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த அஷ்டமத்துச் சனியின் ஆதிக் கம் விலகி, இப்பொழுது ஆனந்தமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கப் போகின்றது.
இந்த சனிப்பெயர்ச்சியால் மிகுந்த நற்பலன்களைப் பெறும் ராசிகளில் முதன்மையான ராசியாக உங்கள் ராசி விளங்கப் போகின்றது. எண்ணற்ற பிரச்சினைகளைச் சந்தித்து வந்த உங்களுக்கு இப்பொழுது விடிவுகாலம் பிறந்துவிட்டது.
விலகிய சனியை, விலகும் நாளிலேயே கும்பிட்டு மகிழ்வது நல்லது. பொதுவாக திருநள்ளாறு சென்று நளதீர்த்தத்தில் குளித்து அங்குள்ள காக வாகனச்சனியை வழிபட்டு வந்தால் கடந்த காலத்தில் ஏற்பட்ட சிக்கல் களும், சிரமங்களும் அகலும்.
திருக்கொள்ளிக் காட்டிலுள்ள பொங்கு சனீஸ்வரர் வழிபாட்டையும் நீங்கள் மேற்கொள்ளலாம். மேலும் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகிலுள்ள பெரிச்சிக் கோவிலில் வீற்றிருந்து அருள்வழங்கும் வன்னி மரத்தடி சனீஸ்வரர், குச்சானூர் சனிபகவான் போன்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வருவது நல்லது. சனி விலகும் இந்த நேரத்தில் சனி பகவான் சன்னிதியில் எள் தீபம் ஏற்றி வழிபட்டால் நல்லது நடக்கும்.
9-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் ஒளிமயமான வாழ்க்கைக்கு வழிவகுத்துக் கொடுப்பார். பொன், பொருட்களின் சேர்க்கை அதிகரிக் கும். பிரிந்து சென்ற உறவினர்கள் இனி பாசத்தோடு வந்திணைவர். செல்வாக்கு உயரும்.
ஒன்பதாமிடத்துச் சனி பொன், பொருளைத் தருமா?
மாபெரும் கிரகம் என்று வர்ணிக்கப்படும் சனி பகவான் உங்கள் ராசிக்கு 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவார். தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியாக விளங்கும் சனி பகவான், தற்சமயம் பிதுர்ரார்ஜித ஸ்தானம் எனப்படும் தந்தைவழி முன்னேற்றத்தைக் குறிக்கும் இடத்திற்கு பெயர்ச்சியாகப் போகின்றார். எனவே பெற்றோர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். அவர்கள் மூலமாக தொழில்வளர்ச்சியைப் பெருக்கிக் கொள்ள வாய்ப்புகள் உருவாகும். உடன்பிறப்புகளிடம் காட்டிய பாசத்தை இனி உங்களிடமும் காட்டுவர். உறவுகளிலிருந்த மனக்கசப்புகள் மாறும்.
ஒன்பதில் வந்த ஈசன்
உன்னத வாழ்வைத் தந்து
பொன்பொருள் குவிய வைக்க
புகழ்மிக்க வாழ்வு காண
அன்புடன் சனியைக் கண்டும்
அனுமனை வழி பட்டாலும்
வன்பகை மாறும்! நல்ல
வசந்தமும் வந்து சேரும்!
என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது.
எனவே, காக வாகனத்தானையும், அனுமனையும் கைகூப்பி வழிபடுவது நல்லது.
ஒரு கிரகம் எந்த இடத்தின் ஆதிபத்யத்திற்கு உரியதோ அந்த இடத்திற்குரிய செயல்பாடுகளை செய்வதில் தடை ஏற்படுத்தாது.
ஒரு வேளை உங்கள் சுயஜாதகத்தில் திசாபுத்தி வலிமை இழந்திருந்தாலோ, ராகு-கேதுக்களின் ஆதிக்கத்தில் சிக்கி இருந்தாலோ சனி, குரு போன்ற கிரகங்கள் பகை கிரகத்தின் பாத சாரத்தில் இருந்தாலோ, உங்களுக்கு நற்பலன்கள் ஏற்படுவதில் தாமதங்கள் ஏற்படலாம்.
தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றுவது பரிகாரங்கள் தான். எனவே ஜாதக அடிப்படையில் வரம் கொடுக் கும் தெய்வத்தை தேர்ந் தெடுத்து அதற்குரிய ஸ்தலங்களுக்கு யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டு வந்தால் வாய்ப்புகள் வாயிற் கதவைத் தட்டும். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.
இதுவரை எட்டில் சனி சஞ்சரித்த பொழுது மன உளைச்சல் அதிகமாக இருந்திருக்கலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகளும் பணத்தட்டுப்பாடுகளும் அதிகரித்திருக்கலாம். ஆரோக்கியப் பாதிப்பால் மருத்துவச் செலவு கூடியிருக்கலாம். உத்தியோகத்தில் நிரந்தரமில்லாத நிலை, சம்பள உயர்வில் தடை போன்றவைகள் ஏற்பட்டிருக்கலாம்.
இனி அந்த நிலை மாறப்போகின்றது. வாகன வசதிகளும், வளர்ச்சியும் கூடப்போகின்றது. பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி சகல பாக்கியங்களையும் உங்களுக்கு வழங்கப் போகின்றது. நீங்கள் தீட்டிய திட்டங் களுக்கு முக்கிய நபர்கள் வந்து ஒத்துழைப்புச் செய்வர்.
மந்தனின் பார்வையால் ஏற்படும் மகத்தான பலன்கள்!
சனி பகவான் 9-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது அதன் பார்வை 3, 6, 11 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே இதுவரை மனஅமைதியின்றி பிரச்சினைக்கு மத்தியில் வாழ்ந்த உங்களுக்கு இனி மன அமைதி கிடைக்கப் போகின்றது. சகோதரர்களுடன் இருந்த சச்சரவுகள் அகலும். பாகப் பிரிவினைகள் சுமுகமாக முடிய அவர்கள் ஒத்துழைப்புச் செய்வர். இளைய சகோதரத்துடன் இணக்கம் ஏற்படும்.
உடன்பிறப்புகள் வழியில் தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டவர் களுக்கு அது கைகூடும். நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த வழக்குகள் சாதகமாக முடியும். கட்டிடப் பணி பாதியில் நிற்கின்றதே என்ற கவலை இனி அகலும். அசையா சொத்துகள் வாங்குவதில் இருந்த தடைகள் அகலும். பணியாளர்கள் பக்குவமாக நடந்து கொள்வர்.
6-ம் இடத்தையும் சனி பார்ப்பதால் எதிரிகள் சரணடைவர். இல்லம் தேடி நல்ல தகவல் வந்து சேரும். உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு, அதிகார பலம் போன்றவை தானாகத் தேடிவரும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு வங்கிகளின் ஒத்துழைப்போடு அதிக முதலீடு செய்ய தொகை கிடைக்கும்.
சனியின் பார்வை லாப ஸ்தானத்தில் பதிவதால் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். சேமிப்பு உயர வழிவகை செய்து கொள்வீர்கள். இப்பொழுது பிள்ளைகளாலும், வாழ்க்கைத் துணையாலும் வருமானம் வரலாம்.
குதூகலம் தரும் குருப்பெயர்ச்சிக் காலம்!
4.10.2018-ல் விருச்சிக ராசியில் குரு சஞ்சரிக்கப் போகின்றார். அதன்பிறகு 28.10.2019-ல் தனுசு ராசிக்கு குரு செல்கின்றார். இந்த சனிப் பெயர்ச்சிக் காலத்தில் இரண்டு முறை குருப்பெயர்ச்சி நிகழவிருக்கின்றது. இதன் விளைவாகவும் நீங்கள் நல்ல மாற்றங்களைச் சந்திக்கப் போகிறீர்கள்.
விருச்சிகத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது அதன் பார்வை 2, 4, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே வாக்கு, தனம், குடும்பம் ஆகிய இடங்கள் புனிதமடைகின்றன. எனவே பொருளாதார நிலையில் இருந்த ஏற்ற இறக்கங்கள் மாறும். கல்யாணப் பேச்சு வார்த்தைகள் கைகூடும். புத்திர விருத்திக்கான வாய்ப்பு உருவாகும்.
அஷ்டமத்தில் குரு அடியயெடுத்து வைக்கின்றாரே என்று நீங்கள் நினைக்க வேண்டாம். 12-க்கு அதி பதியான குரு பகவான் அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் பொழுது பலவித நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். தாய் வழி ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் விருப்ப ஓய்வில் சுயதொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டு.
தனுசு ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது உங்கள் ராசியையும், மூன்று, ஐந்து ஆகிய இடங்களையும் பார்க்கப் போகின்றார். எனவே ஆரோக்கியம் சீராகும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். பூர்வீக சொத்து களை விற்றுப் புதிய சொத்துகளை வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
ராகு-கேது பெயர்ச்சிக் காலம்!
13.2.2019-ல் மிதுன ராசியில் ராகுவும், தனுசு ராசியில் கேதுவும் சஞ்சரிக்கின்றார்கள். உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரிக்கும் ராகு முன்னேற்றப் பாதைக்கு வழிகாட்டப் போகின்றார்.
9-ல் சஞ்சரிக்கும் கேது ஒளிமயமான வாழ்விற்கு உத்தரவாதம் தரப்போகின்றது. அடிப்படை வசதிகள் பெருகும். மறைமுக எதிர்ப்புகள் மாறும். மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு கூடுதலாக கிடைக்கும்.
பரம்பரை சொத்துகளில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கு முறையாக வந்து சேரும். வெளிநாட்டு தொடர்பு அனுகூலம் தரும். பங்காளிப் பகை மாறும். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். ஆலயத்திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மங்கையருக்கான மகத்தான பலன்கள்!
மேஷ ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி நினைத்தது நினைத்தபடியே நிறைவேறும். கல்யாணம், குழந்தை பாக்கியம் போன்றவற்றில் இருந்த தடைகள் அகலும். சுபநிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறும். கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றி குடும்ப முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொள்வீர்கள்.
பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாகவோ, எதிர்கால முன்னேற்றம் கருதியோ எடுத்த முயற்சிகள் பலன்தரும். தாய் மற்றும் உடன் பிறப்புகளின் ஆதரவு கூடுதலாகக் கிடைக்கும்.
9-ல் சஞ்சரிக்கும் சனி பொன், பொருட்கள் சேர வழிவகுத்துக் கொடுப்பார். ஆரோக்கியம் சீராகும். உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு சம்பள உயர்வு, பதவியில் உயர்வு போன்றவைகள் வந்து சேரும்.
சுய ஜாதகத்தில் திசாபுத்திக்கேற்ற தெய்வங்களை வழிபடுவதோடு சனிக்கிழமை தோறும் விநாயகப் பெருமானை வழிபடுவது நல்லது.
தொட்ட காரியங்களில் வெற்றி பெற வழிபாடு!
சிவாலயத்திற்கு சென்று சனி பகவான் சன்னிதியில் எள் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட்டு வருவது நல்லது. வியாழன் தோறும் குரு வழிபாட்டையும் மேற்கொள்ளுங் கள். ராகு-கேதுக்களின் மூலம் நற்பலன்கள் கிடைக்க சர்ப்ப சாந்திப் பரிகாரம் செய்வது நல்லது.
சிறப்பு வழிபாடாக யோகபலம் பெற்ற நாளில் தஞ்சை பெரிய கோவிலுக்குச் சென்று பிரகதீஸ்வரர், அம்பிகை, வராஹி வழிபாட்டை மேற்கொண்டால் வளர்ச்சி கூடும்.
சனியின் வக்ர காலம்!
25.4.2018 முதல் 21.8.2018 வரை மூல நட்சத்திரக் காலில் சனி வக்ரம் பெறுகின்றார். 8.5.2019 முதல் 3.9.2019 வரை மீண்டும் பூராட நட்சத்திரக் காலில் சனி வக்ரம் பெறுகின்றார்.
இக்காலத்தில் தொழிலில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. இழப்பு களையும், ஏமாற்றங்களையும் சந்திக்க நேரிடும். விரயங்கள் கூடுதலாக இருக்கும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் உருவாகும். அருகில் உள்ளவர்களின் ஆதரவு குறைவாகவே கிடைக்கும். பங்குதாரர்கள் உங்கள் பணிக்கு ஒத்துழைப்புச் செய்ய மறுப்பர். உடல் ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு அகலும். புதியவர்களை நம்பி ஒப் படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம். வழிபாட்டில் கவனம் செலுத்துவதன் மூலமே வளர்ச்சியைக் கூட்டிக் கொள்ள இயலும்.
13.2.2019 முதல் 31.8.2020 வரை
அசுவினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்)
மூன்றில் ராகு முன்னேற்றம் தரும்
பரபரப்பாகப் பேசப்பட்ட பாம்புக் கிரகங்களின் பெயர்ச்சி வந்துவிட்டது. இதுவரை கடக ராசியில் சஞ்சரித்து வந்த ராகுவும், மகர ராசியில் சஞ்சரித்து வந்த கேதுவும் தனது வான்வழிப் பயணத்தில் 13.2.2019 அன்று பின்னோக்கி வந்து உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க வழி
செய்யப் போகிறார்கள்.
ராகு பகவான் புனர்பூசம் நட்சத்திரக் காலில் குரு சாரத்திலும், பிறகு திருவாதிரை நட்சத்திரக் காலில் சுயசாரத்திலும், பிறகு மிருகசீரிஷம் நட்சத் திரக் காலில் செவ்வாய் சாரத்திலும் சுமார் 1½ ஆண்டு காலங்கள் சஞ்சரிப்பார். அதே போல கேது பகவான் உத்ரா டம் நட்சத்திரக் காலில் சூரிய சாரத்திலும், பூராடம் நட்சத்திரக் காலில் சுக்ர சாரத்திலும், மூலம் நட்சத்திரக் காலில் சுய சாரத்திலுமாக சுமார் 1½ ஆண்டு காலம் சஞ்சரிக்கப் போகிறார்.
இந்த நட்சத்திர பாதசார அடிப்படையிலும், குருப்பெயர்ச்சி மற்றும் குருவின் அதிசார காலம், சனியின் வக்ர இயக்க காலத்திற்கு ஏற்பவும், உங்கள் சுய ஜாதகத்தின் திசாபுத்தி படியும் உங்களுக்குரிய பலன்கள் நடைபெறும்.
திருப்பம் தரும் 3-ம் இடத்து ராகு!
உன்னதமான 9-ம் இடத்து கேது!
கடந்த 1½ ஆண்டு காலமாக உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சஞ் சரித்து வந்த ராகு, இப்பொழுது 3-ம் இடத்திற்கு வருகிறார். இதுவரை 10-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த கேது, 9-ம் இடத்திற்கு வருகிறார். தொழில் வளர்ச்சியில் தடை ஏற்பட்டு, ‘எப்பொழுது நல்ல திருப்பம் வரும்’ என்று எதிர்பார்த்துக் காத்திருந்த உங்களுக்கு, நல்ல திருப்பங்கள் ஏற் படப் போகிற காலம் கட்டம் இது.
3-ம் இடத்து ராகுவால் முக்கியத் திருப்பங்கள் ஏற்படும். முன்னேற்றம் கூடும். முட்டுக்கட்டைகள் அகலும். எடுத்த காரியத்தை துணிச்சலோடு செய்து, எல்லாவற்றிலும் வெற்றி காண்பீர்கள். உங்களைப் பொறுத்தவரை சகாய ஸ்தான ராகு, எண்ணற்ற சகாயங்களைத் தர இருக்கிறது. அடிப்படை வசதிகளைப் பெருக்குவீர்கள். ஆதாயம் தரும் தகவல்கள் வந்து கொண்டே இருக்கும். பரம்பரைச் சொத்துக்களில் கிடைக்க வேண்டிய பங்கு, முறையாகக் கிடைக்கும். இனத்தார் பகை மாறும். நீண்ட நாள் நிலுவையில் இருந்த வழக்கு சாதகமாக முடியும். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். பதவி உயர்வும், உயர் அதிகாரியின் பாராட்டும் கிடைக்கலாம்.
9-ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால், பிதுரார்ஜித ஸ்தானம் புனிதம் அடைகின்றது. ‘ஐந்தும், ஒன்பதும் மிஞ்சும் பலன் தரும்’ என்பார்கள். எனவே பொருளாதார வளர்ச்சி பெருகப்போகிறது. கேதுவின் ஆதிக்கத்தால் பூர்வீக சொத்துக்களில் இதுவரை இருந்த வில்லங்கங்கள் விலகும். குடும்பத்தில் அரை குறையாக நின்ற காரியங்கள் நிறைவேறும். அலுவலகங்களிலோ, வங்கிகளிலோ பலமுறை விண்ணப்பித்தும் இதுவரை கிடைக்காத தொகை, தற்போது வந்து சேரும். கடன் சுமை முற்றிலும் குறையக் கூடிய நல்ல வாய்ப்பு உருவாகும். பெற்றோர் வழியிலும் எதிர்பார்த்த நற்பலன் கிடைக்கும். உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும். தூர தேசத்தில் இருந்து வரும் தகவல் ஒன்று, உங்களின் தொழிலை மேம்படுத்தும். வார்த்தைகளில் கடுகடுப்பைக் காட்டியவர்கள், இனி கனிவோடு பேசுவர். பயணங்கள் மூலம் பலன்கள் அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.
குரு சாரத்தில் ராகு சஞ்சாரம்
(13.2.2019 முதல் 19.8.2019 வரை)
உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவரது சாரத்தில் புனர்பூச நட்சத்திரக் காலில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, தனவரவு தாராளமாக வந்து கொண்டே இருக்கும். கொடிகட்டிப் பறந்த குடும்பப் பிரச்சினை, நல்ல முடிவிற்கு வரும். கடன்கள் படிப்படியாக குறையும். சுப காரியங்களுக்காக எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். உற்றார், உறவினர்கள் உங்களுக்குச் சாதகமாக நடந்துகொள்வர். முக்கியப் புள்ளிகள், உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுப்பர். செல்வாக்கு உயரும். தந்தை வழியில் ஒத்துழைப்பு உண்டு. மூத்த சகோதரத்தால் முன்னேற்றம் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் வந்து சேரும். வாகனம் வாங்கி மகிழும் யோகம் உண்டு.
சுய சாரத்தில் ராகு சஞ்சாரம்
(20.8.2019 முதல் 27.4.2020 வரை)
திருவாதிரை நட்சத்திரக் காலில் சுயசாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, உங்களின் உடல்நலம் சீராகும். நினைத்த காரியத்தை உடனடியாக செய்து முடிப்பீர்கள். சகோதர ஒற்றுமை பலப்படும். உடன்பிறப்புகளின் இல்லத்து சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் காலம் இது. உங்கள் திறமை பளிச் சிடும். உத்தியோகத்தில் மேலதி காரிகளின் ஆதரவு அதிகரிக்கும். சக பணியாளர்களுடன் ஏற்பட்ட பகை மாறும். உத்தியோகம் தொடர்பாக வெளிநாட்டு யோகம் கூட ஒரு சிலருக்கு கிடைக்கலாம்.
செவ்வாய் சாரத்தில் ராகு சஞ்சாரம்
(28.4.2020 முதல் 31.8.2020 வரை)
மிருகசீரிஷம் நட்சத்திரக் காலில் செவ்வாய் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவை அனைத்தும் பூர்த்தியாகும். உங்கள் ராசிநாதனான செவ்வாய், தைரியகாரகன் என்பதால் இந்த காலகட்டத்தில் உங்களது தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். துணிந்து எடுத்த முடிவால் தொழிலில் மிகப்பெரிய முன்னேற்றம் உண்டாகும். எதிரிகள் சரணடைவர். அதிகாரப் பதவியில் இருப்பவர்களது ஆதரவைப் பெறுவீர்கள். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கலாம். இடம் வாங்கும் யோகம் உண்டு.
சூரிய சாரத்தில் கேது சஞ்சாரம்
(13.2.2019 முதல் 16.4.2019 வரை)
உத்ராடம் நட்சத்திரக் காலில் சூரிய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது, பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். பூர்வீக சொத்துக்களை விற்றுப் புதிய சொத்துக்களை வாங்கும் முயற்சி கைகூடும். சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும், உத்தியோக உயர்வும் வருவதற்கான அறிகுறிகள் தென்படும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வாங்கல்- கொடுக்கல்களில் ஆதாயம் கூடும்.
சுக்ர சாரத்தில் கேது சஞ்சாரம்
(17.4.2019 முதல் 23.12.2019 வரை)
பூராடம் நட்சத்திரக் காலில் சுக்ர சாரத்தில் கேது சஞ்சரிப்பது, ஒரு பொற்காலமாகும். சிந்திக்காது செய்த காரியங்களில் கூட சிறப்பான பலன் கிடைக்கும். குடும்ப முன்னேற்றம் கூடுதலாக இருக்கும். கொடுத்த தொகைகள் திரும்ப வரும். சுக்ரன், உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங் களுக்கு அதிபதி என்பதால், குடும்பத்தில் குதூகலமான சம்பவங்கள் ஏராளமாக நடைபெறும். வீடு வாங்கும் யோகம் உண்டு. வியாபாரத்தை விரிவு படுத்த முயற்சிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். சொத்துக்கள் வாங்கும் பொழுது செவ்வாய் பலம் பெற்றிருப்பவர்களின் பெயரில் வாங்குவது நல்லது.
சுய சாரத்தில் கேது சஞ்சாரம்
(24.12.2019 முதல் 31.8.2020 வரை)
மூலம் நட்சத்திரக் காலில் சுய சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். முன் கோபத்தால் முன்னேற்றம் தடைபடும். சந்தர்ப்பங்கள் சாதகமாகுமா? என்பது சந்தேகம். உறவினர் பகை உருவாகும். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும். பங்காளிப் பகை வராமல் பார்த்தக் கொள்ளுங்கள். வெளிநாடு சென்றவர்கள், வேலை கிடைக்காமல் திரும்பலாம். புண்ணிய காரியங்களுக்குப் பொருளுதவி செய்வீர்கள்.
வழிபாடு
3-ம் இடத்து ராகுவால் முன்னேற்றம் கூடவும், 9-ம் இடத்து கேதுவால் ஒப்பற்ற வாழ்க்கை அமையவும், ராகு சன்னிதியில் உளுந்தும், கேது சன்னிதியில் கொள்ளும் தானமாக கொடுப்பது நல்லது. செவ்வாய்க்கிழமை தோறும் விரதமிருந்து முருகப்பெருமான் படத்தை வைத்து வழிபட்டால் காரியத்தடை அகலும்.
கவனம் தேவைப்படும் காலம்
தனுசு ராசியில் சஞ்சரிக்கும் சனி, 8.5.2019 முதல் 3.9.2019 வரை வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அவரோடு கேதுவும் இணைந்துள்ளார். எனவே இந்த காலத்தில் மனக்கசப்பு தரும் சம்பவங்கள் ஏராளமாக நடைபெறும். இனம்புரியாத கவலை மனதில் ஏற்பட்டு, குழப்பத்தை உண்டாக்கும். வரவைக் காட்டிலும் செலவு அதிகமாகும் நேரம் இது. உதவுவதாகச் சொன்னவர்கள் கூட கடைசி நேரத்தில் கையை விரிப்பார்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். ‘ஆதாயம் குறைவாக இருப்பதால், தொழில் மாற்றம் செய்யலாமா?’ என்று சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களது மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது அவசியம். அதிகாரிகளோடு முரண்பட்டால், வேலையில் பிரச்சினை உருவாகக்கூடும். ஜாதகத்தில் தசாபுத்தி பலம் இழந்து காணப்பட்டால், உங்களுக்கு இடமாற்றங்கள் உறுதியாகலாம்.
பெண்களுக்கான பலன்கள்
உங்களுக்கு வரப்போகும் ராகு -கேது பெயர்ச்சி, ஒரு பொன்னான காலமாகும். பொருளாதார நிலை திருப்தி தரும். குரு பார்வை பதியும் காலத்தில் இல்லத்தில் சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் சூழல் வரும். கணவன் - மனைவி ஒற்றுமை பலப்படும். புகுந்த வீட்டிற்கும், பிறந்த வீட்டிற்கும் பெருமை தேடித் தருவீர்கள். குழந்தைகளின் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். தாய்வழி ஆதரவு உண்டு. ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி நிரந்தரம் பற்றிய நல்ல தகவல் வந்து சேரும். வெளிநாட்டில் இருந்து வரும் தகவல் அனுகூலமாகும். பெற்றோர்களின் ஆதரவு திருப்தி தரும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. ராகு-கேது நற்பலன்களை வழங்க, விநாயகர் வழிபாட்டையும், துர்க்கை வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள்.
28-10-2019 முதல் 15-11-2020 வரை
அசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்)
ஒன்பதில் வந்த குருபகவான்! ஒளிமயமாகும் எதிர்காலம்!
உதவி செய்வதன் மூலம் நல்ல பதவிகளை வரவழைத்துக் கொள்ளும் மேஷ ராசி நேயர்களே!
உங்கள் ராசிநாதன் செவ்வாய் ‘தைரியகாரகன்’ என்று அழைக்கப் படுபவர். தன்னம்பிக்கையும், தெய்வ நம்பிக்கையும் அதிகம் பெற்றவர்கள் நீங்கள். உயர்ந்த சிந்தனையும், உதவும் மனப்பான்மையும் உங்களுக்கு இயல் பாகவே இருக்கும்
இப்படிப்பட்ட குணங்களைப் பெற்ற உங்களுக்கு விருச்சிக ராசியில் இருந்து பெயர்ச்சியாகி தனுசு ராசியில் அடியெடுத்து வைக்கும் குரு கோடி, கோடியாய் கொட்டிக் கொடுக்கப் போகின்றாரா? குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு வித்திடப் போகின்றாரா என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
வரப்போகும் குருப்பெயர்ச்சி உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தை புனிதப் படுத்துகின்றது. அங்கிருந்து கொண்டு 5-ம் பார்வையாக உங்கள் ராசியையும் பார்க்கின்றது. 9-ம் இடம் என்பது தகப்பனாரைப் பற்றி அறிந்து கொள்ளும் இடமாகும். தந்தை வழிச்சொத்து, வம்சவிருத்தி, தர்மம் செய்யும் வாய்ப்பு, குருவின் மூலமாக தீட்சைபெறும் நிலை, தெய்வப்பற்று, தீர்த்த யாத்திரை செய்யும் யோகம், கண்ணியமான வாழ்க்கை, வாகனம் வாங்கி மகிழும் யோகம் போன்றவற்றை எல்லாம் எடுத்துரைக்கும் இடமாகும்.
குருவின் பார்வைப்படி “ஐந்தும், ஒன்பதும் மிஞ்சும் பலன்தரும்” என்பதால் தொழிலில் இனி அதிகளவில் லாபம் கிடைக்கும். தொல்லை தந்த எதிரிகள் விலகிச் செல்வார்கள். தடைகளை நீக்குவது குருபார்வை என்பதால் மங்கல ஓசை மனையில் கேட்கவும், மழலைப்பேறு வாய்க்கவும் வழிகிடைக்கும்.
தனுசு குருவின் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு குருபகவான் 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவார். அதாவது பிதுர்ரார்ஜித ஸ்தானம் மற்றும் அயன, சயன ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானம் ஆகிய ஸ்தானங் களுக்கு அதிபதியானவர். அவர் 28.10.2019 முதல் 15.11.2020 வரை தனுசு ராசியில் சஞ்சரித்தாலும் இடையில் 27.3.2020 முதல் 7.7.2020 வரை மகர ராசியில் சஞ்சரிக்கின்றார். 13.5.2020 முதல் 9.9.2020 வரை குரு வக்ர கதியில் இயங்குகின்றார்.
முதலில் மகரத்தில் வக்ரம் பெறுகின்றார். பிறகு தனுசில் வக்ரம் பெறுகின்றார். மகர ராசியில் குருபகவான் சஞ்சரிக்கும் பொழுது அங்கு நீச்சம் பெறுகின்றார். அதாவது மகர ராசி குருவிற்கு நீச்ச வீடாகும்.
மகர ராசியில் குரு நீச்சம் பெற்று வலிமை இழக்கிறாரே, எப்படி நமக்கு நல்ல பலன்களை அள்ளித்தருவார் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். ஏற்கனவே தனுசு ராசியில் சனி சஞ் சரித்துக் கொண்டிருக்கின்றார். எனவே சனி வீட்டில் குருவும், குரு வீட்டில் சனியுமாக இருந்து பரிவர்த்தனை யோகமும், நீச்சபங்க ராஜயோகமும் பெறுகின்றார். எனவே வக்ர இயக்கத்தில் கூட வளர்ச்சி பெற வழிவகுத்துக் கொடுப்பார்.
தனுசில் சஞ்சரிக்கும் குருபகவான் கேதுசாரம் பெற்று மூல நட்சத்திரக் காலிலும், சுக்ர சாரம் பெற்று பூராடம் நட்சத்திரக் காலிலும், சூரிய சாரம் பெற்று உத்ராட நட்சத்திரக் காலிலுமாக சஞ்சரிக்கப் போகின்றார்.
அந்தந்தக் காலங்களில் கிரக நிலைக்கு ஏற்பவும், சாரபலத்திற்கு ஏற்பவும் ஏற்றங்களும், நல்ல மாற்றங்களும் வந்து கொண்டேயிருக்கும். ஏற்றங்கள் வருகிற பொழுது உங்கள் மனம் மகிழ்ச்சியடையும். மாற்றங்களால் மனக்குழப்பம் ஏற்படுகின்ற பொழுது மகிழ்ச்சியை வரவழைத்துக்கொள்ளவும், தடைகற்களை படிக்கற்களாக மாற்றவும் வழிபாடு உங் களுக்குத் துணையாக இருக்கும்.
குருவின் பார்வை பலன்
‘ஜென்மத்தை குருதான் பார்த்தால் சிறப்பான வாழ்க்கை சேரும், நன்மைகள் அதிகம் வாய்க்கும், நம்பிக்கை அனைத்தும் நடக்கும்’ என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது. அந்த அடிப்படையில் இந்த குருப்பெயர்ச்சியின் விளைவாக குருவின் பார்வை 1, 3, 5 ஆகிய மூன்று இடங்களிலும் பதிகின்றது.
ஜென்ம ராசியை குரு பார்ப்பதால் உடல் ஆரோக்கியம் சீராகும். உற்சாகத்தோடு பணிபுரிய இயலும். உன்னத வாழ்விற்கு அடித்தளம் அமைத்துக்கொடுக்க உறவினர்களும், நண்பர்களும் போட்டி போட்டுக்கொண்டு வருவர். வாரிவழங்கும் வள்ளலாக மாற வசதிகள் பெருகும். உடலில் இருந்த எண்ணிலடங்கா பிணிகளெல் லாம் இடம் தெரியாமல் ஓடி ஒளியும். புகழ், செல்வாக்கு அதிகரிக்கும். கல்யாண காரியங்கள் கைகூடும். கடமையிலிருந்த தொய்வு அகலும்.
குருவின் பார்வை 3-ம் இடத்தில் பதிவதால் முன்னேற்றப்பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள். தைரிய ஸ்தானத்தை சப்தம பார்வையாக குரு பார்க்கப் போகின்றார். 3-ம் இடம் என்பது தைரிய ஸ்தானம் மற்றும் சகோதர ஸ்தானம் என்று அழைக்கப்படும் இடமாகும். எனவே உங்கள் ஆற்றலும், திறமையும் வெளிப்படும். பாகப்பிரிவினைகள் பாதகமில்லாமல் அமையலாம். சகோதர, சகோதரிகளின் திருமணம் தடைகள் இல்லாமல் நடைபெற வழி பிறக்கும். இதுவரை உங்களோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு விலகிச் சென்ற சகோதரர்கள் இனித் தானாக வந்திணைவர்.
குருவின் பார்வை பஞ்சம ஸ்தானத்தில் பதிவதால் நெஞ்சம் மகிழும் சம்பவங்கள் நிறையவே நடைபெறப் போகின்றது. குறிப்பாக ஐந்தாம் இடம் என்பது புத்திர ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று குறிப்பிடுவது வழக்கம். எனவே அந்த இடத்தில் குரு பார்வை பதிந்து புனிதமடையச்செய்வதால் வந்த துயரங்கள் வாசலோடு நிற்கும். வரன்பார்த்து, பிள்ளைகளின் கல்யாண முயற்சிகள் கைகூடவில்லையே, மனம் ஒத்துப் போனால் பணப்பிரச்சினை வருகின்றது. கணப் பொருத்தம், ரஜ்ஜுப் பொருத்தம், பொருந்தாமல் வந்த ஜாதகங்களை எல்லாம் திருப்பிக்கொடுக்க நேரிடுகின்றதே, நமக்குப் பிடித்த சம்பந்தமாக இருந்தால் அவர்கள் பதில்சொல்ல மறுக்கிறார்களே என்றெல்லாம் மனக்குழப்பம் அடைந்த பெற்றோர்கள் இனி பணப் புழக்கத்திற்கும் குறைவு ஏற்படாமல் வரன்களும் திருப்திகரமான முறையில் வந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தப்போகின்றது.
பெற்றோர்களைப் பிரிந்த பிள்ளைகள் இனி மீண்டும்வந்து இணையலாம். பெண் பிள்ளைகளுக்கு உச்சி முதல் உள்ளங்கால் வரை நகை பூட்டி மணக்கோலம் காண வழிவகுத்துப் புன்னகையும், பொன்னகையும் அணிந்த தோற்றத்தோடு புகுந்த வீட்டிற்கு அனுப்பும் வாய்ப்பு கைகூடும். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் ஒவ்வொன்றாக மாறும். பெற்றோர் வழிச் சொத்துக்களை பிரித்துக் கொடுப்பதில் இருந்த குறுக்கீடு சக்திகள் அகலும்.
அடகு வைத்த நகைகளை மீட்டுக் கொண்டு வருவீர்கள். அதிக லாபம் தொழிலில் கிடைக்கும். பிள்ளை களின் கல்யாண முயற்சியும், கடல் தாண்டும் முயற்சியும் கைகூடும். மகப்பேறு வாய்க்காதவர்களுக்கு இப் பொழுது செய்யும் வழிபாடுகளாலும், பரிகாரங்களாலும் பிள்ளைச் செல்வம் இல்லத்தில் துள்ளி விளையாடும்.
மகர குருவின் சஞ்சார காலம்!
27.3.2020 முதல் 7.7.2020 வரை மகர ராசியில் குரு சஞ்சரிக்கின்றார். இதற்கிடையில் 13.5.2020 முதல் குரு பகவான் மகர ராசிக்குள் வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். இந்த மகர குருவின் சஞ்சாரம் எப்படி இருக்கின்றது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
மகர ராசி குருவிற்கு நீச்ச வீடாகும். அதாவது குரு பகவான் வலிமையிழக்கின்ற ராசி மகர ராசி. உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். 12-ம் இடத்திற்கு அதிபதி வலிமையிழப்பது யோகம் தான். “கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்” என்பதற்கேற்ப சில நடக்காத காரியங்கள் இப் பொழுது நடைபெறும். வியாபாரம் சூடு பிடிக்கும். பயணங்கள் அதிகரிக்கும். அத்தியாவசியச் செலவுகள்மட்டுமின்றி ஆடம்பரச் செலவுகளையும் செய்ய முன்வருவீர்கள்.
அதே நேரத்தில் குரு சனி வீட்டிலும், சனி குரு வீட்டிலுமாக இருப்பதால் பரிவர்த்தனை யோகம் என்ற ஒரு யோகம் உண்டு. யோகங்களில் இது முதன்மையான யோகம் என்பதால் இக்காலத்தில் புதிய புதிய வாய்ப்புகளும் வந்து சேரும். குறிப்பாக தொழில் மாற்றுச் சிந்தனைகள் மேலோங்கும். அரசுவழி வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு அது கைகூடலாம்.
குறிப்பாக பத்தாமிடத்து குரு பதவி மாற்றம் தரும் என்பதால் இக்காலத்தில் இடமாற்றம், ஊர் மாற்றம், உத்தியோக மாற்றங்கள் கைகூடலாம். அந்நிய தேசத்திற்கான அழைப்பு ஒரு சிலருக்கு வந்து சேரலாம். தொழில் புரிபவர்களுக்குப் பங்குதாரர்களை விலக்கிவிட்டுப் புதியவர்களைச் சேர்த்துக்கொள்ளும் நிர்ப்பந்தம் கூட உருவாகலாம்.
செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!
இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக இனிய பலன்கள் கிடைக்க நவகிரகத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும், குருவையும், வடக்கு நோக்கி வீற்றிருந்து வரம்தரும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரையும் வழிபட்டு வளர்ச்சியைக் கூட்டிக் கொள்ளுங்கள். பவுர்ணமி கிரிவலம் பலன்களை அதிகம் அள்ளித் தரும்.
குருவின் வக்ர காலம்!
13.5.2020 முதல் 9.9.2020 வரை தனுசு ராசியிலும், மகர ராசியிலுமாக வக்ரம் பெறுகின்றார். இக் காலத்தில் மனக்குழப்பம் அதிகரிக்கும். மாற்றுக் கருத்துடையோரின் எண்ணிக்கை உயரும். பணப் புழக்கம் குறையும். பக்கத்தில் இருப்பவர்களால் சிக்கல்கள் உருவாகலாம். எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்துச்செய்வது நல்லது. நிதானத்துடன் செயல்பட்டால் தான் நிம்மதி கிடைக்கும். மற்றவர்களுக்குப் பொறுப்பு சொல்வதைத் தவிர்க்க வேண்டிய நேரமிது. சேமிப்புகள் கரையலாம். திடீர் திருப்பங்கள் அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரும். விரயங்களிலிருந்து விடுபட விழிப்புணர்ச்சி தேவை. உறவினர் பகை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இக்காலத்தில் முன்னோர் வழிபாட்டை முறையாகச் செய்வதோடு திசைமாறிய தென்முகக்கடவுளையும், நந்தியெம்பெருமானையும் வழிபட்டு வருவது நல்லது.
பெண்களுக்கான சிறப்பு பலன்கள்
மேஷ ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தக் குருப் பெயர்ச்சி இனிய பெயர்ச்சியாக அமையப் போகின்றது. மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடை பெறும். உடல் ஆரோக்கியம் சீராகும். கணவன்-மனைவிக்குள் கனிவும், பாசமும் கூடும். அணி மணிகளும், ஆடைகளும் அதிகம் சேரும். புனிதப் பயணங்களையும், உல்லாசப் பயணங்களையும் மேற்கொள்ளும் வாய்ப்பு உருவாகும். தாய், தந்தையரின் அன்பும், ஆதரவும் பெருகும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிட்டும். பெண் பிள்ளை களின் திருமண முயற்சி மற்றும் வெளிநாடு சென்று மேற் படிப்பு படிக்க விரும்புபவர்களுக்காக எடுத்த முயற்சிகளிலும் அனு கூலம் உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு பணிநிரந்தரம், அரசு வேலை, இலாகா மாற்றம், உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வுகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வியாழக்கிழமை விரதமிருந்து குருதட்சிணாமூர்த்தி வழிபாட்டையும், தெசா புத்திக்கேற்ற தெய்வ வழிபாடு களையும் மேற்கொண்டால் நாளும் நல்லதே நடக்கும்.