'பொன்னியின் செல்வன்' படத்தில் ரஜினிகாந்த் விரும்பிய வேடத்தில் நடித்ததை பெருமையாக கருதுகிறேன் - சரத்குமார் பேட்டி


பொன்னியின் செல்வன் படத்தில் ரஜினிகாந்த் விரும்பிய வேடத்தில் நடித்ததை பெருமையாக கருதுகிறேன் - சரத்குமார் பேட்டி
x

“பொன்னியின் செல்வன்" படத்தில் ரஜினிகாந்த் நடிக்க ஆசைப்பட்ட வேடத்தில் நடித்த அனுபவம் பற்றி சரத்குமார் கூறினார்.

"பொன்னியின் செல்வன்" படத்தில் இடம்பெறும் பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்க ஆசைப்பட்டார். இதற்காக அவர் டைரக்டர் மணிரத்னத்தை நேரில் சந்தித்து தனது விருப்பத்தை சொன்னார். ஆனால் அந்த வேடத்தில் சரத்குமார் நடித்து இருக்கிறார். பழுவேட்டரையர் வேடத்தில் நடித்த அனுபவம் பற்றி கேட்டதற்கு பதில் அளித்து சரத்குமார் கூறியதாவது:-

"பழுவேட்டரையர் 64 விழுப்புண்களை பெற்ற மாவீரர். பொன்னியின் செல்வன் கதையை படிக்கும்போதே பெரிய பழுவேட்டரையர் வேடத்தில் நடிப்பது யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அந்த வாய்ப்பை எனக்கு அளித்த டைரக்டர் மணிரத்னத்துக்கு நன்றி. அந்த வேடத்தில் யாரெல்லாம் நடிக்க ஆசைப்பட்டார்கள் என்று தெரியாது. ரஜினிகாந்த் நடிக்க விரும்பியதை பெருமையாக கருதுகிறேன்.

கேள்வி:- பொன்னியின் செல்வன் படத்தில் சில கதாநாயகர்களின் கதாபாத்திரம் சுருக்கப்பட்டதாக பேசப்படுகிறதே?

பதில்:- எனக்கு தெரியாது. டைரக்டர் மணிரத்னம் என்ன நினைத்தாரோ அதை சிறப்பாக படமாக்கி இருக்கிறார்.

கேள்வி:-கதாநாயகனாக நடித்த நீங்கள் இப்போது அண்ணன், அப்பா கதாபாத்திரங்களில் நடிக்கிறீர்களே...அதுபற்றி வருத்தம் இருக்கிறதா?

பதில்:- கதாநாயகன், வில்லன், அப்பா, அண்ணன் இதெல்லாம் கதாபாத்திரங்கள். அதில் சிறப்பாக நடிப்பவர்கள் தான் நல்ல நடிகராக இருக்க முடியும்.

கேள்வி:- உங்களுக்கு ஜோடியாக அறிமுகமான ஒரு நடிகை இப்போது, நம்பர்-1 கதாநாயகியாக இருக்கிறார். கோடி கோடியாக சம்பளம் வாங்கி கொண்டிருக்கிறார். இன்னொரு நடிகை ஆந்திராவில் மந்திரி ஆகிவிட்டார். மற்றொரு நடிகை தொடர்ந்து இருபது வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் உங்களை ராசியான கதாநாயகன் என்று சொல்கிறார்களே... அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- என்னுடன் நடித்த நடிகைகள் மிகப் பெரிய அந்தஸ்தை அடைந்திருப்பதில் சந்தோஷம். அது அவர்கள் முயற்சிக்கு கிடைத்த வெற்றி.

கேள்வி:- தமிழ் பட உலகின் அழகான கதாநாயகர்களில் நீங்களும் ஒருவர் என்று பேசப்படுவதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- அப்படி சொல்கிற எல்லோருக்கும் நன்றி.

கேள்வி:- மணிரத்னம் டைரக்‌ஷனில் நடித்திருப்பது பற்றி?

பதில்:- மணிரத்னம் பேனரில் ஏற்கனவே 'வானம் கொட்டட்டும்' படத்தில் நடித்திருக்கிறேன். இப்போது அவருடைய டைரக்‌ஷனில், லைகா தயாரிப்பில் நடித்திருப்பதை பெருமையாக கருதுகிறேன்.

இவ்வாறு சரத்குமார் கூறினார்.


Next Story