கார்த்தியின் முகநூல் பக்கம் முடக்கம்


கார்த்தியின் முகநூல் பக்கம் முடக்கம்
x

நடிகர் கார்த்தியின் முகநூல் பக்கத்தையும் மர்ம நபர்கள் ஊடுருவி முடக்கி உள்ளனர்.

நடிகர்-நடிகைகள் முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் கணக்கு தொடங்கி, தாங்கள் நடிக்கும் படங்கள் பற்றிய விவரங்கள், புகைப்படங்கள் போன்றவற்றை பகிர்ந்து வருகிறார்கள். இந்த கணக்குகளை விஷமிகள் ஊடுருவி முடக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. ஏற்கனவே பல முன்னணி நடிகர், நடிகைகளின் கணக்குகள் விஷமிகளால் முடக்கப்பட்டு பின்னர் மீட்கப்பட்டன.

இந்த நிலையில் தற்போது நடிகர் கார்த்தியின் முகநூல் பக்கத்தையும் மர்ம நபர்கள் ஊடுருவி முடக்கி உள்ளனர். நேற்று அதிகாலை கார்த்தியின் முகநூல் பக்கத்தில் விளையாட்டு தொடர்பான வீடியோ ஒன்று நேரலை செய்யப்பட்டது. அதை பார்த்த ரசிகர்கள் கார்த்தியிடம் எதற்காக விளையாட்டை நேரலை செய்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்து கார்த்தி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ''எனது முகநூல் பக்கம் முடக்கப்பட்டு உள்ளது. முகநூல் குழுவுடன் இணைந்து அதை சரிசெய்யும் பணிகள் நடந்து வருகின்றன" என்று தெரிவித்து உள்ளார். கார்த்தியின் முகநூல் பக்கத்தை 39 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story