இளையராஜா- வைரமுத்து சர்ச்சை குறித்த கேள்விக்கு குஷ்புவின் பதில்


இளையராஜா- வைரமுத்து சர்ச்சை குறித்த கேள்விக்கு குஷ்புவின் பதில்
x
தினத்தந்தி 6 May 2024 11:55 AM GMT (Updated: 6 May 2024 12:17 PM GMT)

இளையராஜா- வைரமுத்து தொடர்பான சர்ச்சை குறித்து நடிகை குஷ்புவிடம் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அவரும் அதற்கு பதில் கொடுத்திருக்கிறார்.

படத்தில் வந்துள்ள பாடல்களின் இசை காப்புரிமை தனக்கே சொந்தம் என இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கிடையில் நடிகர் ரஜினிகாந்தின் 'கூலி' பட டைட்டில் டீசரில் தனது பாடல் இசையை அனுமதி வாங்காமல் பயன்படுத்தியதற்காகவும் அவர் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பினார்.

இதில், இளையராஜா இசையில் பல பாடல்களை எழுதிய வைரமுத்து, 'பாடல்கள் எழுதிய பாடலாசிரியரும் இப்படி உரிமை கொண்டாடினால் என்னவாகும்?' என கேள்வி எழுப்பினார். இந்த விவகாரம் தொடர்பாக திரைத்துறையில் பல விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், நடிகை குஷ்புவும் இதுகுறித்து கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

நேற்று இரவு, 'அரண்மனை4' படத்தை திரையரங்குகளில் ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்த குஷ்பு பின்பு செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். 'அரண்மனை4' படத்தை குஷ்பு தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வைரமுத்து- இளையராஜா விவகாரத்தைக் குறிப்பிட்டு குஷ்புவிடம் "இசை பெரிதா? மொழி பெரிதா?" என்று கேள்வி எழுப்பினர். அதற்கு குஷ்பு, "திரைத்துறையில் எல்லா விஷயங்களுமே டீம் வொர்க்தான். இந்த விஷயத்தை இயக்குநரும் இசையமைப்பாளரும்தான் பேச வேண்டும். நடிகை, தயாரிப்பாளராக நான் இதை பேசக்கூடாது.

வைரமுத்துவுக்கும் இளையராஜாவுக்கும் இடையில் போர் போய்க் கொண்டிருக்கிறது என்றால் அவர்கள்தான் இதுகுறித்துப் பேச வேண்டும். மற்றபடி எனக்கும் இசைக்கும் சம்பந்தம் கிடையாது" என்றார்.

மேலும், தயாரிப்பாளர்கள் இசை தங்களுக்குதான் சொந்தம் என்று சொல்வது குறித்து தயாரிப்பாளராக தங்கள் பார்வை என்ன என்று அவரிடம் கேட்டதற்கு, "மீண்டும் சொல்கிறேன். ஒரு படம் உருவாவது டீம் வொர்க்தான். இதற்கு மேல் பேச ஒன்றுமில்லை" என்றார்.


Next Story