வதந்திக்கு நாசர் விளக்கம்


வதந்திக்கு நாசர் விளக்கம்
x

சினிமாவை விட்டு விலக நாசர் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியானது அதற்கு நடிகர் நாசர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் பிரபல குணசித்திர நடிகராக இருப்பவர் நாசர். தென்னிந்திய நடிகர் சங்க தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார்.

இந்த நிலையில் சினிமாவை விட்டு விலக நாசர் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியானது. சிரஞ்சீவியுடன் நடிக்கும் ஆச்சார்யா பட நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தபோது இதனை அவர் தெரிவித்ததாக தெலுங்கு இணைய தளங்களில் தகவல் பரவின.

இதனை நாசர் தற்போது மறுத்துள்ளார். இதுகுறித்து நாசர் கூறும்போது, ''என்னை பற்றி தவறான தகவல் பரவி உள்ளது. சினிமாவை விட்டு விலகும் எண்ணம் இருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. நான் அதிக படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறேன். தொடர்ந்து நடிப்பேன். தற்போது 3 தமிழ் படங்களில் நடித்து வருகிறேன். 3 இந்தி படங்களிலும், ஒரு இந்தி வெப் தொடரிலும் நடிக்கிறேன். 2 தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறேன். எனவே தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம்" என்றார்.


Next Story