வீட்டு வேலைக்கு சென்ற இளம்பெண் மீது தாக்குதல்: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியும், நிவாரணமும் கிடைத்திட துணை நிற்போம் - பா.ரஞ்சித்


வீட்டு வேலைக்கு சென்ற இளம்பெண் மீது தாக்குதல்: பாதிக்கப்பட்ட  பெண்ணுக்கு நீதியும், நிவாரணமும் கிடைத்திட துணை நிற்போம் - பா.ரஞ்சித்
x
தினத்தந்தி 19 Jan 2024 8:59 AM GMT (Updated: 19 Jan 2024 9:49 AM GMT)

திமுக எம்.எல்.ஏ.கருணாநிதியின் மகன், மருமகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

சென்னை,

சென்னை பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் வீட்டில், வீட்டு வேலை செய்த இளம்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிறுமியை கொடுமைப்படுத்திய எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில், எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ, மருமகள் செர்லினா மீது நீலாங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை சட்டம், குழந்தைப் பாதுகாப்பு சட்டம், ஆபாசமாக பேசியது, தாக்கியது, மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டில் பணிபுரிந்த இளம்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நீலாங்கரை மகளிர் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

இந்தநிலையில், இயக்குநர் பா.ரஞ்சித் X தள பதிவில் கூறியதாவது:-

பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் வீட்டில் வேலைசெய்த இளம்பெண்ணை அவரது மகன், மருமகள் உள்ளிட்ட குடும்பத்தினர் கொடும் சித்திரவதைக்குள்ளாகிய செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இக்கொடூர செயலை புரிந்தவர்கள் மீது எவ்வித பாரபட்சமின்றி தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியும், நிவாரணமும் தாமதமின்றி கிடைத்திட துணை நிற்போம் இவ்வாறு கூறியுள்ளார்.



Next Story