வீட்டு முன்பு படுத்து தூங்கியவரை யானை துதிக்கையால் தூக்கி வீசியது படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதி


வீட்டு முன்பு படுத்து தூங்கியவரை யானை துதிக்கையால் தூக்கி வீசியது படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதி
x
தினத்தந்தி 16 Jun 2017 10:15 PM GMT (Updated: 16 Jun 2017 6:38 PM GMT)

பர்கூர் அருகே வீட்டுமுன்பு படுத்து தூங்கியவரை யானை துதிக்கையால் தூக்கி வீசியது படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதி

அந்தியூர்,

பர்கூர் அருகே ஊருக்குள் புகுந்த யானை வீட்டு முன்பு படுத்து தூங்கியவரை துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

யானை தூக்கிவீசியது

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் பெஜில்பாளையத்தை சேர்ந்தவர் மாதன் (வயது 55). மாடு மேய்க்கும் தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு மாதன் வீட்டுக்கு வெளியே கட்டிலில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தார். அவருடைய மனைவியும், மகன்களும் உள்ளே படுத்திருந்தனர்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை பர்கூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு ஆண் யானை பெஜில்பாளையம் ஊருக்குள் வந்தது. பின்னர் மாதன் வீட்டை நெருங்கிய யானை வீட்டின் முன்பு கட்டிலில் படுத்திருந்த அவரை துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

உடனே சத்தம் போட்டபடி அவர் சிறிதுதூரம் ஓடிச்சென்று நின்றுகொண்டார். சத்தம் கேட்டு மாதனின் மனைவி, மகன்களும், அக்கம் பக்கத்தினரும் ஓடிவந்து, தீப்பந்தம் காட்டி யானையை காட்டுக்குள் விரட்டினார்கள். பின்னர் 108 ஆம்புலன்சு மூலம் மாதன் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதல் உதவி சிகிச்சை பெற்ற பிறகு மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

சிகிச்சை பெற்று வரும் மாதனை பர்கூர் வனச்சரகர் பாலகிருஷ்ணன் சென்று பார்த்தார். அரசின் நிதி உதவி பெற்றுத்தருவதாக ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் குறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story