ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் இன்றி போலீஸ் ஏட்டு பலி டிரைவர் கைது


ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் இன்றி போலீஸ் ஏட்டு பலி டிரைவர் கைது
x
தினத்தந்தி 25 July 2017 10:47 PM GMT (Updated: 25 July 2017 10:47 PM GMT)

எண்ணூரில் கன்டெய்னர் லாரி மோதி படுகாயம் அடைந்த போலீஸ் ஏட்டு நேற்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய கன்டெய்னர் லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.

திருவொற்றியூர்,

மீஞ்சூரை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 45). எண்ணூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டு ஆக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 19–ந்தேதி நள்ளிரவு எண்ணூர் கடற்கரை சாலையில், நேதாஜி நகர் அருகே மோட்டார் சைக்கிளில் ரோந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வேகமாக வந்த கன்டெய்னர் ஒன்று அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சரவணகுமாரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணிக்கு சரவணகுமார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து மாதவரம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கன்டெய்னர் லாரி டிரைவர் செங்குன்றத்தை சேர்ந்த ராஜா(27) என்பவரை கைது செய்தனர்.

உயிரிழந்த சரவணகுமாருக்கு யமுனா என்ற மனைவியும், ராஜலட்சுமி (3) என்ற குழந்தையும் உள்ளனர்.


Next Story