ஆதிதிராவிட ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் 2 நாட்களில் மனு தாக்கல் செய்ய முடிவு


ஆதிதிராவிட ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் 2 நாட்களில் மனு தாக்கல் செய்ய முடிவு
x
தினத்தந்தி 1 Aug 2018 9:00 PM GMT (Updated: 1 Aug 2018 6:50 PM GMT)

ஆதிதிராவிட ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் 2 நாட்களில் மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக பரமேஸ்வர் கூறினார்.

பெங்களூரு,

ஆதிதிராவிட ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் 2 நாட்களில் மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக பரமேஸ்வர் கூறினார்.

உயர்மட்ட ஆலோசனை

அரசு ஆதிதிராவிடர், பழங்குடியின ஊழியர்கள் பதவி உயர்வு விவகாரம் குறித்து முதல்–மந்திரி குமாரசாமி நேற்று பெங்களூருவில் ஆலோசனை நடத்தினார். இதில் கலந்து கொண்ட துணை முதல்–மந்திரி பரமேஸ்வர் அந்த கூட்டத்திற்கு பின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஊழியர்களின் பதவி உயர்வு விவகாரம் குறித்து முதல்–மந்திரி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆதிதிராவிட ஊழியர்களுக்கு அநீதி ஏற்படாமல் எங்கள் அரசு பார்த்துக்கொள்ளும். இந்த பதவி உயர்வு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வருகிற 15–ந் தேதி விசாரணைக்கு வருகிறது. அதுவரை நாங்கள் காத்திருப்பது இல்லை.

2 நாட்களில் மனு தாக்கல்

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இயற்றப்பட்ட சட்டத்தை அமல்படுத்த அனுமதி கோரி சுப்ரீம் கோர்ட்டில் இன்னும் 2 நாட்களில் மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளோம். மேலும் இந்த வழக்கில் தீர்ப்பை விரைவாக வழங்குமாறு கேட்போம். சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்வது குறித்து மந்திரிசபை கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளோம்.

அரசு துறைகளில் சிலருக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வு வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதனால் எந்த துறையிலும் யாருக்கும் பதவி உயர்வு£ வழங்குவதோ அல்லது வழங்கப்பட்ட பதவி உயர்வை வாபஸ் பெறுவதோ வேண்டாம் என்று முதல்–மந்திரி குமாரசாமி உத்தரவு பிறப்பிப்பார். அவ்வாறு உத்தரவிட்டால் தற்போதைக்கு பிரச்சினை இருக்காது.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.


Next Story