நாகர்கோவிலில் பட்டப்பகலில் துணிகரம்: போலீஸ் சூப்பிரண்டு அலுவலக பெண் ஊழியரிடம் நகை- பணம் திருட்டு


நாகர்கோவிலில் பட்டப்பகலில் துணிகரம்: போலீஸ் சூப்பிரண்டு அலுவலக பெண் ஊழியரிடம் நகை- பணம் திருட்டு
x
தினத்தந்தி 18 Sep 2018 11:18 PM GMT (Updated: 18 Sep 2018 11:18 PM GMT)

நாகர்கோவிலில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக பெண் ஊழியரிடம் நகை- பணம் திருட்டு போனது

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக பெண் ஊழியரிடம் நகை- பணம் திருட்டு போனது. மயக்க மருந்து கொடுத்து கைவரிசை காட்டிய மர்மபெண்ணை போலீஸ் தேடுகிறது.

பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

நாகர்கோவில் கோட்டார் பட்டகசாலியன்விளையை சேர்ந்தவர் முத்துகுமார். இவருடைய மனைவி வசந்தி (வயது 52). இவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று வசந்தி வீட்டு செலவுக்கு பணம் எடுப்பதற் காக ஒரு ஏ.டி.எம். மையத்திற்கு சென்றார். பின்னர் பணத்தை எடுத்துக்கொண்டு வடிவீஸ் வரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு புறப்பட் டார்.

இதற்காக கோட்டார் பஸ் நிறுத்தத்தில் நின்றுகொண் டிருந்தார். அப்போது 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் அங்கு வந்தார். அவர் வசந்தியின் அருகில் நின்று கொண்டு பேச்சுக் கொடுத் தார். வசந்தியும் அவரிடம் பேசினார்.

பின்னர் அந்த பெண், தானும் வடிவீஸ்வரம் செல்வ தாகவும், எனவே இருவரும் பேசிக்கொண்டே நடந்து செல்வோமா? என்று வசந்தியை அழைத்துள்ளார். அந்த பெண்ணின் பேச்சை நம்பிய வசந்தி அவருடன் சேர்ந்து நடந்து சென்றார். வடிவீஸ்வரம் மாடசாமி கோவில் அருகே சென்றதும் கால் வலிப்பதாக அந்த பெண் கூறியுள்ளார். இதனால் கோவில் நிழலில் இருவரும் அமர்ந்து ஓய்வெடுத்தனர். பின்னர் வசந்தியிடம் தண்ணீர் பாட்டிலை வாங்கி அந்த பெண் தண்ணீர் குடித்தார்.

தொடர்ந்து அந்த தண்ணீர் பாட்டிலை வசந்தியிடம் கொடுத்து தண்ணீர் குடிக்கும்படி கூறியதாக தெரிகிறது. நடந்து வந்ததில் தாகம் எடுத்ததால் வசந்தியும் தண்ணீரை வாங்கி குடித்தார். ஆனால் தண்ணீரை குடித்து சில நொடிகளில் வசந்தி மயக்கம் அடைந்து அங்கே விழுந்துவிட்டார். அதன்பிறகு சிறிது நேரம் கழித்து எழுந்து பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அவர் அணிந்திருந்த 3 பவுன் நகை மற்றும் கைப்பையில் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. உடன் வந்த பெண்ணும் மாயமாகி இருந்தார். தண்ணீரில் மயக்க மருந்து கலந்துகொண்டு வசந்தியிடம் இருந்த நகை மற்றும் பணத்தை அந்த மர்ம பெண் திருடி சென்றது தெரியவந்தது.

இதுபற்றி கோட்டார் போலீஸ் நிலையத்தில் வசந்தி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, வசந்தியை ஏமாற்றி நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம பெண் யார்? என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏ.டி.எம். மையத்தில் அவர் பணம் எடுப்பதை அந்த மர்ம பெண் நோட்டமிட்டு இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

எனவே ஏ.டி.எம். மையத் தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் அந்த பெண்ணின் உருவம் பதிவாகியிருக்கிறதா? என்பதை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் 2 பேரும் சேர்ந்து நடந்து வந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் சோதனை செய்கிறார்கள். அந்த மர்ம பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story