வனப்பகுதியில் இருந்து பிரிப்பது துன்புறுத்துவது போன்றது: கோவில்களில் யானைகள் எந்த அடிப்படையில் வளர்க்கப்படுகின்றன? ஐகோர்ட்டு கேள்வி


வனப்பகுதியில் இருந்து பிரிப்பது துன்புறுத்துவது போன்றது: கோவில்களில் யானைகள் எந்த அடிப்படையில் வளர்க்கப்படுகின்றன? ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 19 Sep 2018 11:15 PM GMT (Updated: 19 Sep 2018 7:07 PM GMT)

கோவில்களில் யானைகள் எந்த அடிப்படையில் வளர்க்கப்படுகின்றன? என்பது குறித்து அறநிலையத்துறை கமி‌ஷனர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

மதுரை,

சென்னையை சேர்ந்த ஆண்டனி கிளின்டன் ரூபின், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:–

முதுமலை வனப்பகுதியில் கடந்த 2007–ம் ஆண்டு தாயை இழந்த நிலையில் 3 வயதுடைய குட்டி யானை ஒன்றை வனத்துறையினர் மீட்டனர். அந்த குட்டி யானை தெப்பக்காடு யானைகள் முகாமில் 9 வயது வரை வளர்க்கப்பட்டது.

பின்னர் அந்த யானையை கடந்த 2016–ம் ஆண்டு அப்போதைய முதல்–அமைச்சர் ஜெயலலிதா, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வழங்கினார். அதற்கு மசினி என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த யானை, பாகன் ராஜேந்திரன் கண்காணிப்பில் வளர்ந்தது.

தெப்பக்காடு வனப்பகுதியில் முகாமில் இருந்தபோது சுறுசுறுப்பாக இருந்த மசினி, சமயபுரம் கோவிலில் தனிமைப்படுத்தப்பட்டதால் அதன் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த மே மாதம் 25–ந்தேதி மசினி யானைக்கு மதம் பிடித்தநிலையில் பாகன் ராஜேந்திரனை கோவிலில் வைத்தே மிதித்து கொன்றது. இதில் 9 பக்தர்களும் காயம் அடைந்தனர்.

இதையடுத்து சிகிச்சைக்காக அந்த யானை தஞ்சாவூர் ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை ஆராய்ச்சி கல்லூரிக்கு அனுப்பப்பட்டது. வனஉயிரின பாதுகாப்புச்சட்டத்தின்படி யானைகள், பாதுகாக்கப்பட்ட வன உயிரினங்களுள் ஒன்றாக உள்ளன. மேலும் துன்புறுத்தப்படுவதில் இருந்து யானைகளை பாதுகாக்க சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை பல்வேறு வழிகாட்டுதல்களை கூறி உள்ளது.

எனவே தஞ்சாவூர் ஒரத்தநாடு கால்நடை ஆராய்ச்சி கல்லூரியில் உள்ள மசினி யானையை முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் சேர்க்க வேண்டும். யானைகளை அதன் இருப்பிடமான வனப்பகுதிகளில் இருந்து கோவில் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘‘வன உயிரினங்களை அதன் இருப்பிடமான வனப்பகுதியில் இருந்து பிரித்து கோவில்கள் மற்றும் பிற இடங்களில் எந்த அடிப்படையில் வளர்க்கப்படுகிறது? யானையை வனப்பகுதியில் இருந்து பிரித்து வளர்ப்பது என்பது அவற்றை துன்புறுத்துவது போன்றது என்று நினைக்கவில்லையா? இதுபோன்ற பிரச்சினைகளுக்கு கோர்ட்டு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறது’’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பின்னர் இந்த வழக்கு குறித்து இந்து சமய அறநிலையத்துறை கமி‌ஷனர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை அடுத்த மாதம் (அக்டோபர்) 10–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story