பிளஸ்-2 மாணவ - மாணவிகளுக்கு ஜனவரி 10-ந் தேதிக்குள் மடிக்கணினி வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


பிளஸ்-2 மாணவ - மாணவிகளுக்கு ஜனவரி 10-ந் தேதிக்குள் மடிக்கணினி வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
x

பிளஸ்-2 மாணவ- மாணவிகளுக்கு ஜனவரி மாதம் 10-ந் தேதிக்குள் மடிக்கணினி வழங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

வேலூர்,

வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 308 மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை வழங்கும் விழா வேலூரில் உள்ள ஹோலிகிராஸ் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கி பேசினார். கோ.அரி எம்.பி. முன்னிலை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் வரவேற்றார். மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் திட்ட அறிக்கை வாசித்தார்.

விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோர் கலந்துகொண்டு 4 மாவட்டங்களை சேர்ந்த 308 மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகளை வழங்கினர்.

முன்னதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:-

ஜெயலலிதா வழியில் நடைபெறும் இந்த அரசு நீங்கள் கேட்காமலேயே அள்ளிக்கொடுக்கும் அரசாக விளங்குகிறது. பள்ளிகளுக்கு அங்கீகாரம் இல்லை என்றால் உங்களால் தேர்வு மையம் பெறமுடியாது, வாகனங்களை பராமரிக்க முடியாது. இதை உணர்ந்துதான் அங்கீகார ஆணை வழங்கப்படுகிறது. 3 ஆண்டுகளுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பது எங்களுடைய ஆசை. ஆனால் சுயநிதி பள்ளிகள் கோர்ட்டில் தடைபெற்றுள்ளதால் ஓராண்டுக்கு மட்டுமே நீட்டிப்பு செய்து வழங்கப்படுகிறது.

உங்களுடைய கஷ்டம் எங்களுக்கு தெரியும். அதைபோக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோன்று பள்ளிகளின் தரத்தையும், மாணவர்களின் கல்வி தரத்தையும் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் 81 லட்சத்து 42 ஆயிரம் மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள்.

இந்த அரசு தொலைநோக்கு சிந்தனையில் செயல்பட்டு வருகிறது. 1 முதல் 5-ம் வகுப்புவரையிலும், 6 முதல் 8-ம் வகுப்புவரையிலும் மாணவ- மாணவிகளுக்கான சீருடை மாற்றப்படுகிறது. இதன்மூலம் வரும் ஆண்டில் தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அரசு பள்ளிகளின் சீருடை இருக்கும். வளர்ந்துவரும் விஞ்ஞானத்திற்கு ஏற்ப மாணவர்களின் அறிவியல் திறனை வளர்க்க வரும் டிசம்பர் மாதத்திற்குள் 620 பள்ளிகளில் தலா ரூ.20 லட்சம் மதிப்பில் அறிவியல் ஆய்வுக்கூடங்கள் ஏற்படுத்தப்படும்.

கோர்ட்டில் வழக்கு முடியாததால் கடந்த ஆண்டு மடிக்கணினி, சைக்கிள் வழங்கப்படவில்லை. விடுபட்ட மற்றும் தற்போது பிளஸ்-2 படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ஜனவரி மாதம் 10-ந் தேதிக்குள் மடிக்கணினியும், அதற்கு முன்னதாக பிளஸ்-1 மாணவர்களுக்கு சைக்கிளும் வழங்கப்படும். வரும் டிசம்பர் மாதத்திற்குள் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்படும். 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை இணையதள வசதி செய்யப்படுகிறது.

மழைநீரை சேமித்துவைக்க தடுப்பணைகள் கட்டுவதற்கு புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை விரைவில் முதல்-அமைச்சர் அறிவிப்பார். பள்ளிகளில் மழைநீரை சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மரங்களை அழிப்பதால் இயற்கை மாற்றங்கள் ஏற்படுகிறது. எனவே இயற்கை மாற்றங்களை தடுக்க வேண்டும். இதற்காக ஒரு மாணவர் 5 மரக்கன்று நடும் திட்டம் தொடங்கப்படுகிறது. மரங்களை பராமரிப்பதற்கு 6-ம் வகுப்புக்கு மேல் படிக்கும் 5 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட இருக்கிறது என்று அவர் பேசினார்.

பின்னர் அவர் கூறுகையில் பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை சுத்தம் செய்ய ரோட்டரி சங்கம் சார்பில் 200 வாகனங்கள் வழங்கி உள்ளனர். 33 பள்ளிகளில் தலா ஒரு மாணவர் மட்டுமே படிக்கிறார்கள். இந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடுநிலை பள்ளிகளில் உள்ள அங்கன்வாடி குழந்தைகள் எல்.கே.ஜி.யில் சேரும் வகையில் கல்வி கற்றுத்தரப்படும் என்றார்.

விழாவில் முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜய், ஆவின் முன்னாள் தலைவர் வேலழகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட கல்வி அலுவலர் குணசேகரன் நன்றி கூறினார்.


Next Story