சேலம் மாவட்டத்தில், ஒரு மாதத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் 55 பேருக்கு சிகிச்சை - அதிகாரிகள் தகவல்


சேலம் மாவட்டத்தில், ஒரு மாதத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் 55 பேருக்கு சிகிச்சை - அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 24 Oct 2018 11:04 PM GMT (Updated: 24 Oct 2018 11:04 PM GMT)

சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் 55 பேர் சிகிச்சை பெற்றுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியில் பொது சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி சுகாதாரத்துறையை சேர்ந்த மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், மலேரியா தடுப்பு களப்பணியாளர்கள், கொசுப்புழுவை கண்டறிந்து அகற்றுபவர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

களப்பணிகளில் அரசுத் துறைகள் மட்டுமல்லாமல், ரோட்டரி சங்கம், அரிமா சங்கம் மற்றும் பிற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள் ஆகியோர் பொதுமக்களிடையே டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- காய்ச்சல் அறிகுறி இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிகளில் சென்று சிகிச்சை பெறவேண்டும். இதை விடுத்து மருந்து கடைகளுக்கு சென்று மாத்திரை வாங்கி சாப்பிடக் கூடாது. இதனால் உயிரிழப்பு ஏற்படக்கூடும். டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வீட்டை சுற்றி நீர் தேங்காதவாறு தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

பன்றிக்காய்ச்சலுக்கு முக்கிய காரணமாக இருப்பது சரியாக கை கழுவாமல் இருப்பதாகும். இதுகுறித்து பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்களும் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். அப்போதுதான் நோயின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியும். பன்றிக்காய்ச்சல் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் 2 லட்சம் மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சேலம் மாவட்டத்தில் மேட்டூர் தலைமை மருத்துவமனை மற்றும் ஆத்தூர், ஓமலூர், சங்ககிரி, எடப்பாடி, ஏற்காடு, கெங்கவல்லி, வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், வேம்படிதாளம், ஜலகண்டாபுரம் உள்ளிட்ட தாலுகா அரசு மருத்துவமனைகளில் 24 மணிநேரமும் செயல்படும் தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இங்கு டாக்டர்கள், செவிலியர்கள் 24 மணிநேரமும் மருத்துவ சிகிச்சை அளிப்பார்கள்.

மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் சுமார் 48 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடனும், 7 பேர் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடனும் என மொத்தம் 55 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். நிலவேம்பு கசாயம் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story