கரூர், நாமக்கல், சேலம் இடையே ரெயில் வழித்தடத்தில் மின்மயமாக்கல் பணி - 15 நாட்கள் பயணிகள் ரெயில் ரத்து


கரூர், நாமக்கல், சேலம் இடையே ரெயில் வழித்தடத்தில் மின்மயமாக்கல் பணி - 15 நாட்கள் பயணிகள் ரெயில் ரத்து
x
தினத்தந்தி 27 Nov 2018 10:41 PM GMT (Updated: 27 Nov 2018 10:41 PM GMT)

கரூர், நாமக்கல், சேலம் இடையே ரெயில் வழித்தடத்தில் மின்மயமாக்கல் பணி காரணமாக, 15 நாட்கள் பயணிகள் ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருச்சி,

திருச்சியில் இருந்து கரூர் வரை இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரெயில்(வண்டி எண்:76833/76834), சேலம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் கரூரில் இருந்து நாமக்கல் வழியாக சேலம் ஜங்ஷன் வரை(வண்டி எண்:06833/06834) சிறப்பு பயணிகள் ரெயிலாக இயக்கப்பட்டு வருகிறது.

தினமும் திருச்சி ஜங்ஷனில் இருந்து காலை 9.35 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில்(வ.எண்:76833) பாலக்கரை, கோட்டை, முத்தரசநல்லூர், ஜீயபுரம், பெருகமணி, பெட்டவாய்த்தலை, குளித்தலை, லாலாபேட்டை, மாயனூர், வீரராக்கியம் வழியாக கரூரை பகல் 11.35 மணிக்கு சென்றடைகிறது. பின்னர் கரூரில் இருந்து 11.40 மணிக்கு சிறப்பு பயணிகள் ரெயிலாக(வ.எண்:06833) புறப்பட்டு நாமக்கல் வழியாக சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தை பகல் 1.20 மணிக்கு சென்றடைகிறது. பின்னர் அங்கிருந்து பிற்பகல் 1.30 மணிக்கு (வ.எண்:06834/76834) புறப்பட்டு நாமக்கல், கரூர் வழியாக மாலை 5.35 மணிக்கு திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தை வந்தடையும்.

தற்போது கரூர், நாமக்கல், சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் வரை உள்ள வழித்தடத்தில் டீசல் என்ஜின் மூலமாகவே ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே, இடைப்பட்ட தூரத்தை மின்மயமாக்கும் பணி பகுதி, பகுதியாக நடந்து வருகிறது. இந்த நிலையில் மீண்டும் மின்மயமாக்கல் பணிகள் இன்று(புதன்கிழமை) முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிற (டிசம்பர்) 12-ந் தேதி வரை, அதாவது 15 நாட்கள் நடக்கிறது. எனவே இந்த 15 நாட்களுக்கும் கரூரில் இருந்து நாமக்கல் வழியாக சேலம் ஜங்ஷன் வரையிலும், சேலம் ஜங்ஷன் முதல் நாமக்கல் வழியாக கரூர் வரையிலும் இயக்கப்பட்டு வரும் சிறப்பு பயணிகள் ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் திருச்சியில் இருந்து கரூர் வரை இயக்கப்பட்டு வரும் ரெயில் சேவையில் எந்த மாற்றமும் இல்லை.



Next Story