பாகமண்டலா அருகே வனப்பகுதியில் இருதரப்பினர் இடையே கோஷ்டி மோதல்; துப்பாக்கி சண்டையில் ஒருவர் கொலை - தப்பி ஓடியவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


பாகமண்டலா அருகே வனப்பகுதியில் இருதரப்பினர் இடையே கோஷ்டி மோதல்; துப்பாக்கி சண்டையில் ஒருவர் கொலை - தப்பி ஓடியவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 12 Dec 2018 10:02 PM GMT (Updated: 12 Dec 2018 10:02 PM GMT)

பாகமண்டலா அருகே வனப்பகுதியில் இருதரப்பினர் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. மேலும் துப்பாக்கிச் சண்டையும் நடந்தது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய இருதரப்பினரையும் வலைவீசி தேடிவருகிறார்கள்.

குடகு,

குடகு மாவட்டம் மடிகேரி தாலுகா பாகமண்டலா அருகே முன்ரோட் வனப்பகுதிக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒரு கும்பல் சென்றனர். அந்த கும்பல் வனப்பகுதியில் வேட்டையாட சென்றதாக கூறப்படுகிறது. அதேபோல் மற்றொரு கும்பலும் வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் 2 கோஷ்டிகளுக்கும் இடையே வனப்பகுதியில் வைத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். மேலும் தாங்கள் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களாலும் ஒருவரையொருவர் வெட்டிக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் 2 கும்பலைச் சேர்ந்தவர்களும் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கிகளால் ஒருவரையொருவர் சுட்டுக் கொண்டுள்ளனர். இரு கோஷ்டிகளுக்கும் கடுமையான துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஒருவர் குண்டு பாய்ந்து பலியானார். இதையடுத்து இரு கோஷ்டியினரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தம் கேட்டு வனப்பகுதிக்குள் அமைந்திருக்கும் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

அப்போது அங்கு ஒருவர் இறந்து கிடந்தார். அவருடைய உடலில் குண்டு காயம் இருந்தது. அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தது வனத்துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் சம்பவம் குறித்து பாகமண்டலா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது துப்பாக்கிச் சண்டையில் கொலை செய்யப்பட்டவர் கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ்(வயது 55) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் ஜார்ஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட இருதரப்பினரையும் வலைவீசி தேடிவருகிறார்கள்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Next Story