நடுக்கடலில் பாம்பன் மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு; இலங்கை கடற்படை நடவடிக்கை


நடுக்கடலில் பாம்பன் மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு; இலங்கை கடற்படை நடவடிக்கை
x
தினத்தந்தி 18 Dec 2018 12:00 AM GMT (Updated: 18 Dec 2018 12:00 AM GMT)

இலங்கை கடற்படையால் நாட்டுப்படகுடன் பாம்பனை சேர்ந்த 8 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர்.

ராமேசுவரம்,

எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் சிறைபிடித்துச் செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. மீண்டும் அதுபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:–

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து, ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனை சேர்ந்த ஸ்டீபன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் ஸ்டீபன், அதே பகுதியை சேர்ந்த ஹில்டன், மற்றொரு ஸ்டீபன், அந்தோணி, பிரசாந்த் மூர்த்தி, ரமேஷ், அப்துல்லா, சுந்தரம் ஆகிய 8 மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

அவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அந்த வழியாக இலங்கை கடற்படையினர் ரோந்து வந்தனர். இந்திய கடல் எல்லையை தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் வந்து மீன்பிடித்ததாக கூறி அந்த நாட்டுப்படகை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர்.

பின்னர் அந்த படகையும், அதில் இருந்த 8 மீனவர்களையும் சிறைபிடித்து இலங்கைக்கு கொண்டு சென்றனர். அங்குள்ள காரைநகர் கடற்படை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டு, பின்னர் 8 பேரையும் ஊர்க்காவல் துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி, வருகிற 20–ந்தேதி வரை அவர்களை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து 8 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கை ராமேசுவரம், ஜெகதாபட்டினம் மீனவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக அந்த 8 மீனவர்களையும், படகையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய–மாநில அரசுகளை மீனவர் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story