மணல் கொள்ளை குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணையை மாவட்டம் முழுவதும் நடத்த வேண்டும் இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்


மணல் கொள்ளை குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணையை மாவட்டம் முழுவதும் நடத்த வேண்டும் இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
x
தினத்தந்தி 14 Jan 2019 11:00 PM GMT (Updated: 14 Jan 2019 7:07 PM GMT)

மணல் கொள்ளை குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணையை மாவட்டம் முழுவதும் நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தி உள்ளது.

சிவகங்கை,

மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம் நாச்சியப்பன் தலைமையில் சிவகங்கையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் கண்ணகி, நிர்வாகிகள் கோபால், ராஜேஸ், சவுந்திரபாண்டியன், கங்கைசேகரன், திருச்செல்வம், முருகேசன், சுந்தரலிங்கம், அழகுராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:– சிவகங்கை மாவட்டம் தொடர்ந்து வறட்சியாக காணப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பொய்த்து வருகிறது. இந்த ஆண்டும் பருவமழையை நம்பி விவசாயம் செய்த அனைத்து பயிர்களும் கருகிவிட்டன. எனவே இந்த மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து வறட்சி நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

2017–18–ம் ஆண்டிற்கு பயிர் இழப்பீட்டு தொகை மாவட்டம் முழுவதும் மிக குறைந்த அளவே அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே மாவட்ட நிர்வாகம் உண்மையான இழப்பீட்டை கணக்கெடுத்து 100 சதவீத பயிர் இழப்பீட்டு தொகை பெற்று தரநடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் மணல் கொள்ளை தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது வைகை படுகையில் நடைபெற்ற மணல் கொள்ளை குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையை மாவட்டம் முழுவதும் நடத்த வேண்டும்.

மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர் கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story