தமிழகத்தில் 5,125 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் தொடங்குவதற்கான டெண்டருக்கு தடை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


தமிழகத்தில் 5,125 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் தொடங்குவதற்கான டெண்டருக்கு தடை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 19 Feb 2019 11:10 PM GMT (Updated: 19 Feb 2019 11:10 PM GMT)

தமிழகத்தில் புதிதாக 5,125 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் (‘பங்க்’கள்) தொடங்குவதற்கு வெளியிடப்பட்ட டெண்டர் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த வெங்கிடுசாமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

கடந்த ஆண்டு ஏப்ரல் 1–ந்தேதி நிலவரப்படி தமிழகத்தில் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்பட மொத்தம் 5,388 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்ளன. ஆனால் தமிழகத்தின் ஊரக பகுதிகளில் மேலும் 5,125 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் தொடங்குவதற்கான டெண்டர் அறிவிப்பை இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரே‌ஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரே‌ஷன் ஆகிய நிறுவனங்கள் கடந்த நவம்பர் மாதம் வெளியிட்டன.

அரசியல் அழுத்தத்தின் காரணமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுச்சூழல் மற்றும் பொதுநலன் பாதிக்கப்படும். பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு தடையில்லா சான்று வழங்குவது குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. ஆனால் மாவட்ட நிர்வாகங்கள் அவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், தடையில்லா சான்று வழங்கி வருகின்றன. பொது கட்டிடங்களுக்கும், பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கும் இடையே 100 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். ஆனால் பல இடங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படுவது இல்லை.

பெட்ரோல் விற்பனை நிலையங்களில் இருந்து வெளியேறும் கழிவுப்பொருட்கள் பொது கால்வாய்களில் விடப்படுகின்றன. இது பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும்.

தடையில்லா சான்று வழங்கும்போது மாவட்ட நிர்வாகம் இதில் கவனம் செலுத்துவது இல்லை. பெட்ரோல் நுகர்வு மற்றும் தேவை குறித்து உரிய கணக்கீடு செய்யாமல் பெட்ரோல் விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க முடிவெடுத்து உள்ளது சட்டவிரோதம்.

பெட்ரோலுக்கான மாற்று எரிபொருள் கொள்கையை மத்திய அரசு அறிவித்திருக்கும் நிலையில், பெட்ரோல் விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் டெண்டர் அறிவிப்பு வெளியிட்டு இருப்பது முரண்பாடாக உள்ளது.

எனவே புதிதாக 5,125 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அமைப்பதற்கான டெண்டர் அறிவிப்புக்கு தடை விதித்தும், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அமைப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ஆராய நிபுணர் குழுவை அமைக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில், 5,125 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் தொடங்குவதற்கு வெளியிடப்பட்ட டெண்டர் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கு குறித்து தமிழக வருவாய்த்துறை செயலாளர், தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தலைவர், இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரே‌ஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரே‌ஷன் ஆகிய நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விசாரணையை வருகிற 7–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story