திருப்புவனம் பா.ம.க. பிரமுகர் கொலையில் கைதான தென்காசி கோழிப்பண்ணை அதிபர் வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை


திருப்புவனம் பா.ம.க. பிரமுகர் கொலையில் கைதான தென்காசி கோழிப்பண்ணை அதிபர் வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை
x
தினத்தந்தி 3 July 2019 10:30 PM GMT (Updated: 4 July 2019 12:20 AM GMT)

திருப்புவனம் பா.ம.க. பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் கைதான தென்காசி கோழிப்பண்ணை அதிபர் வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

தென்காசி,

திருப்புவனம் பா.ம.க. பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் கைதான தென்காசி கோழிப்பண்ணை அதிபர் வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

பா.ம.க. பிரமுகர் கொலை

கும்பகோணம் அருகே உள்ள திருப்புவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். பா.ம.க. பிரமுகரான இவர் கடந்த பிப்ரவரி மாதம் 5–ந் தேதி படுகொலை செய்யப்பட்டார். வேலைக்கு ஆட்களை அழைக்க சென்ற இடத்தில், சிலர் மத மாற்றத்தில் ஈடுபட்டதாகவும், அவர்களை தடுக்கும்போது ஏற்பட்ட வாக்குவாதத்தால் அவர் படுகொலை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த படுகொலை வழக்கு தொடர்பாக ஏற்கனவே சிலர் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த ஏப்ரல் மாதம் 29–ந் தேதி முதல் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சிறப்பு குழுவை அமைத்து, இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நெல்லை மாவட்டம் தென்காசி அருகே மத்தளம்பாறையில் கோழிப்பண்ணை நடத்தி வரும் ஷாலி என்ற மைதீன் அகமது ஷாலி (வயது 51) என்பவரை விசாரணைக்காக கடந்த 25–ந் தேதி கேரள மாநிலம் கொச்சி அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

வீட்டில் திடீர் சோதனை

இந்த நிலையில் தேசிய புலனாய்வு முகமை கொச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு ஜஸ்வீர் சிங் மற்றும் அதிகாரிகள் நேற்று காலை தென்காசிக்கு வந்தனர். பின்னர் அவர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள் திருப்பதி, பிரபாகரன், தென்காசி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சரவணகுமார் ஆகியோருடன் தென்காசி முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் தெருவில் உள்ள மைதீன் அகமது ஷாலியின் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். இதையொட்டி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டப்பட்டு இருந்தது.

சோதனை நடத்திய அதிகாரிகள், அவரது வீட்டில் இருந்து எகிப்து, பாகிஸ்தான், கத்தார், ஈரான் நாட்டு பணம், பான் கார்டு, பாஸ்போர்ட், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றிச்சென்றனர்.

பரபரப்பு

இதுதொடர்பாக மைதீன் அகமது ஷாலியின் உறவினர்கள் கூறுகையில், ‘‘இந்த வழக்கில் அவர் திட்டமிட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கும், இந்த கொலை வழக்குக்கும் தொடர்பு இல்லை. வக்கீலை சந்திக்க அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை‘‘ என்று கூறினர். இந்த திடீர் சோதனை காரணமாக அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது.


Next Story