கோவையில் பரபரப்பு: ஏ.டி.எம்.மில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி தகவல்களை திருட முயற்சி


கோவையில் பரபரப்பு: ஏ.டி.எம்.மில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி தகவல்களை திருட முயற்சி
x
தினத்தந்தி 27 July 2019 10:55 PM GMT (Updated: 27 July 2019 10:55 PM GMT)

ஏ.டி.எம்.மில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி தகவல்களை திருட முயன்ற சம்பவம் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சூலூர்,

கோவை மாவட்டம் சிங்காநல்லூரை சேர்ந்தவர் நந்தகுமார்(வயது36). ஒப்பந்ததாரர்.. இவர் தனது நண்பர் கவுதம்(30) என்பவருடன், மின்சாதன பொருட்களை வாங்க சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவுக்கு சென்றார். அப்போது அவர் அதே பகுதியில் இருந்த கனரா வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் தனது கார்டு மூலம் ரூ.10 ஆயிரம் எடுத்தார்.

பின்னர் அவர் ஏ.டி.எம். கார்டை வெளியே எடுத்தபோது அது எந்திரத்தில் சிக்கி கொண்டது. இதனால் பதற்றமடைந்த அவர், ஏ.டி.எம். கார்டை பிடித்து வேகமாக வெளியே இழுத்தார். அப்போது ஏ.டி.எம். கார்டுடன் சேர்த்து ஒரு கருவியும் வெளியே வந்தது.

மேலும் அங்கு ரகசிய எண்ணை அறிய சிறிய கேமரா பொருத்தப்பட்டு இருந்தது. அதை பார்த்த நந்தகுமார் மற்றும் அங்கிருந்த மற்ற வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவர்கள் போலீசாருக்கும், வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். மேலும் அந்த ஏ.டி.எம். மையத்தில் வரிசையில் இருந்த வாடிக்கையாளர்கள் பணம் எடுக்காமல் திரும்பி சென்றனர்.

இதையடுத்து சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் வங்கி அதிகாரிகள் ஏ.டி.எம். மையத்திற்கு விரைந்து சென்றனர். விசாரணையில் ஏ.டி.எம். எந்திரத்தில் சொருகப்படும் கார்டுகளின் ரகசிய எண் மற்றும் தகவல்களை அறிய ஸ்கிம்மர் கருவி மற்றும் கேமரா பொருத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் ஏ.டி.எம். மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி, ஸ்கிம்மர் கருவி பொருத்தி சென்ற மர்ம நபர்களை அடையாளம் காண முயற்சி செய்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

கோவையில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையங்களில் காவலாளிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் பெரும்பாலான பொதுத்துறை வங்கிகளில் காவலாளிகள் நியமிக்கப்படுவது இல்லை. அது போன்ற ஏ.டி.எம்.களை குறிவைத்து மர்ம நபர்கள் ஸ்கிம்மர் கருவிகளை பொருத்தி வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடி, போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து பணத்தை கொள்ளை அடிக்கின்றனர்.

புதிய தொழில்நுட்பங்களை மர்ம நபர்கள் தெரிந்து கொண்டு பொதுமக்களின் பணத்தை எளிதில் திருடுகின்றனர். இவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story