ஓமியோபதி கல்லூரியில் மாணவரை ஓரின சேர்க்கையில் ஈடுபடுத்தி தொல்லையா? போலீஸ் சூப்பிரண்டு விசாரிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


ஓமியோபதி கல்லூரியில் மாணவரை ஓரின சேர்க்கையில் ஈடுபடுத்தி தொல்லையா? போலீஸ் சூப்பிரண்டு விசாரிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 6 Aug 2019 11:00 PM GMT (Updated: 6 Aug 2019 7:22 PM GMT)

ஓமியோபதி கல்லூரியில் மாணவரை ஓரின சேர்க்கையில் ஈடுபடுத்தி, சில மாணவர்கள் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் போலீஸ் சூப்பிரண்டு விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தர விட்டது.

மதுரை,

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு மாணவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஓமியோபதி மருத்துவ கல்லூரியில் 2017-ம் ஆண்டு சேர்ந்தேன். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கல்லூரி விடுதியில் சில மாணவர்கள் மது குடிப்பது, கஞ்சா புகைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதுமட்டும் அல்லாமல் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு என்னையும் வற்புறுத்தினர்.

நான் மறுத்த போது என்னை அடித்தும், ஆடைகளை கழற்றி வலுக்கட்டாயமாக என்னை ஓரின சேர்க்கையில் ஈடுபடுத்தினர். இதனை படம் பிடித்து என்னை மிரட்டி அடிக்கடி என்னுடன் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு, தொல்லை கொடுத்தனர்.

இதுகுறித்து எனது பெற்றோரிடம் சொல்லி கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தோம். ஆனால் இதுபற்றி விசாரணை நடத்திய பின்னர், மாற்றுச்சான்றிதழ் பெற்றுக்கொண்டு கல்லூரியில் இருந்து நின்று கொள்ள கூறினர்.

இதையடுத்து நான் கல்லூரிக்கு செலுத்திய கட்டணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டேன். ஆனால் கட்டணத்தை திருப்பி தரவில்லை. எனவே தவறான பழக்கவழக்கத்தை கொண்டுள்ள மாணவர்களை காப்பாற்றும் கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கவும், கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணை முடிவில், மாணவர் தொடர்ந்த இந்த வழக்கு குறித்து கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 19-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Next Story