கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சேலம்,
சேலம் பொன்னம்மாபேட்டை சக்திநகரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 23). இவர், கடந்த மாதம் பழைய பஸ்நிலையம் ஆட்கொல்லி பாலத்தில் நடந்து சென்ற ஒருவரை வழிமறித்து வீச்சரிவாளை காட்டி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அப்போது, அந்த நபர் சத்தம் போட்டு கூச்சலிட்டதால் அங்கு பொதுமக்கள் திரண்டனர். ஆனால் அங்கிருந்தவர்களையும் கார்த்திக் அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி கார்த்திக்கை கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.
இதேபோல், கடந்த ஆண்டு கன்னங்குறிச்சி காமராஜ் நகரில் ஒரு வீட்டின் வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்த ஒரு பெண்ணையும், அவரது உறவினரையும் கார்த்திக் தனது கூட்டாளிகளுடன் வந்து கத்தியை காட்டி மிரட்டி செயின் மற்றும் பணத்தை பறித்து சென்றுள்ளார். மேலும், கடந்த மாதம் 13-ந் தேதி சேலம்-ஏற்காடு மெயின்ரோட்டில் வசிக்கும் ஜோதிடர் ஒருவரின் வீட்டிற்குள் சென்ற கார்த்திக், ஜோதிடம் பார்க்க வேண்டும் எனக்கூறி அவர் அணிந்திருந்த ½ பவுன் மோதிரத்தை பறித்து சென்றுவிட்டார். பின்னர் கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் இருந்து மோதிரத்தை பறிமுதல் செய்தனர்.
சேலம் பகுதியில் கொள்ளை, திருட்டு, வழிப்பறி உள்பட பொதுமக்களின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து குற்ற செயல்களில் கார்த்திக் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு மாநகர போலீஸ் கமிஷனருக்கு டவுன் போலீசார் பரிந்துரை செய்தனர். அதன்படி நேற்று குண்டர் சட்டத்தில் கார்த்திக் கைது செய்யப்பட்டார். அதற்கான உத்தரவை கமிஷனர் செந்தில் குமார் பிறப்பித்தார்.
Related Tags :
Next Story