உசிலம்பட்டி அருகே பிளஸ்-1 மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற இரட்டை சகோதரர்கள்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்


உசிலம்பட்டி அருகே பிளஸ்-1 மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற இரட்டை சகோதரர்கள்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
x
தினத்தந்தி 16 Oct 2019 12:15 AM GMT (Updated: 15 Oct 2019 10:11 PM GMT)

உசிலம்பட்டி அருகே பிளஸ்-1 மாணவியை பலாத்காரம் செய்து கொலை செய்த இரட்டை சகோதரர்கள் சிக்கினர்.

உசிலம்பட்டி,

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில்உள்ள ஒருதோட்டத்துக்கு குளிக்கச் சென்ற பிளஸ்-1 மாணவி ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சேடபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை குறித்து பேரையூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மதியழகன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஓணாப்பட்டியைச் சேர்ந்த அம்மவாசி என்பவரது மகன் மாதவன் (24) போலீசாரிடம் சிக்கினார்.

தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அந்த மாணவியிடம் வற்புறுத்தினேன், ஆனால் அவர் மறுத்து வந்ததால் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்ததாக போலீசாரிடம் அவர் முதலில் தெரிவித்து இருந்தார்.

ஆனால் அவரது நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்த கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கக்கூடும் என்ற கோணத்தில் தொடர்ந்து தீவிர விசாரணை செய்தனர். அப்போது மாதவன் மேலும் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

தனது பாட்டியின் ஊர் திருவிழாவிற்கு வந்த மாணவி, மாதவன் வீட்டிற்கு தண்ணீர் பிடிப்பதற்காக அடிக்கடி சென்று வந்துள்ளார். இதில் அவர்கள் அறிமுகமாகி உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த மாணவியை சந்தித்த மாதவன், அவரிடம் ஏதோ கூறி ஆள் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

அப்போது அங்கு மாதவனின் சகோதரர் மதுவும் வந்துள்ளார். பின்னர் அவர்கள் இருவரும் சேர்ந்து மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்னர் இந்த விஷயம் வெளியில் தெரிந்துவிட்டால் ஆபத்து என்று கருதிய அவர்கள் 2 பேரும் அந்த மாணவியின் கழுத்தை நெரித்தும், தலையில் கல்லைப் போட்டும் கொலை செய்துள்ளனர். அதன்பிறகு மாணவி உடலை குன்று பகுதியில் வீசிவிட்டு தப்பிச் சென்றது தெரிய வந்தது. ஆனால் இந்த வழக்கில் மாதவன், மது தவிர மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். மாதவனும், மதுவும் இரட்டை சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமறைவாக இருந்துவரும் மதுவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மாணவியை பலாத்காரம் செய்து இரட்டை சகோதரர்கள் கொன்று இருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story