திருப்பூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 760 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: அண்ணன்-தம்பி கைது


திருப்பூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 760 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: அண்ணன்-தம்பி கைது
x
தினத்தந்தி 21 Dec 2019 10:46 PM GMT (Updated: 22 Dec 2019 12:36 AM GMT)

திருப்பூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 760 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து அண்ணன்-தம்பியை கைது செய்தனர்.

திருப்பூர்,

திருப்பூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 760 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து அண்ணன்-தம்பியை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் மாநகரில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் உத்தரவின் பேரில் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் போலீஸ் துணை கமிஷனர் பத்ரி நாராயணன் மேற்பார்வையில் தெற்கு உதவி கமிஷனர் நவீன்குமார் ஆலோசனையின் பேரில் திருப்பூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் புகையிலை பொருட்களை மொத்தமாக வாங்கி விற்கும் கும்பலை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

திருப்பூர் தினசரி மார்க்கெட் அருகே அதியமான் வீதியில் ஒரு வீட்டில் புகையிலை பொருட்களை மூட்டை, மூட்டையாக பதுக்கி வைத்திருப்பதாக தனிப்படை போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் நேற்று சம்பந்தப்பட்ட வீட்டுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அங்கு மூட்டை, மூட்டையாக புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து புகையிலை பொருட்கள் அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ராஜஸ்தானை சேர்ந்த தினேஷ் பட்டேலை(வயது 23) போலீசார் பிடித்தனர்.

விசாரணையில் தினேஷ் பட்டேலின் அண்ணன் சர்வந்த் ராம்(25) பெங்களூருவில் இருந்து மொத்தமாக புகையிலை பொருட்களை வாங்கி வந்து கோவையில் வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக கோவையில் போலீஸ் கெடுபிடி அதிகம் இருந்ததால் திருப்பூருக்கு கொண்டு வந்து தினேஷ் பட்டேல் தங்கியுள்ள வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து கடை, கடையாக வியாபாரம் செய்ய அனுப்பி வைத்தது விசாரணையில் தெரியவந்தது. தினேஷ் பட்டேல் அளித்த தகவலின் பேரில் சர்வந்த் ராமையும் போலீசார் பிடித்தனர். இவர்களிடம் இருந்து மொத்தம் 760 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்பட்டேல் அவருடைய அண்ணன் சர்வந்த் ராம் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாரை துணை கமிஷனர் பத்ரி நாராயணன் பாராட்டினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, திருப்பூர் மாநகரில் கஞ்சா, லாட்டரி, புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை அடியோடு ஒழிக்கும் வகையில் தொடர்ச்சியாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். மாநகரில் 22 வாட்ஸ்-அப் குழுக்களை மாநகர போலீசார் உருவாக்கி அதில் ஒவ்வொரு பகுதியில் உள்ள பொதுமக்களையும் உறுப்பினர்களாக சேர்த்துள்ளனர். பொதுமக்கள் அளிக்கும் எந்த ஒரு தகவலாக இருந்தாலும் அதன் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த போது பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

Next Story