பீமா-கோரேகாவ் வழக்கை என்.ஐ.ஏ.க்கு மாற்றிய மத்திய அரசின் நடவடிக்கையில் சந்தேகம்: சிவசேனா குற்றச்சாட்டு


பீமா-கோரேகாவ் வழக்கை என்.ஐ.ஏ.க்கு மாற்றிய மத்திய அரசின் நடவடிக்கையில் சந்தேகம்: சிவசேனா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 29 Jan 2020 11:31 PM GMT (Updated: 29 Jan 2020 11:31 PM GMT)

பீமா-கோரேகாவ் வன்முறை வழக்கை என்.ஐ.ஏ.க்கு மாற்றிய மத்திய அரசின் நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாக சிவசேனா குற்றம்சாட்டி உள்ளது.

மும்பை,

பீமா- கோரேகாவ் பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி போர் வெற்றி தினத்தின்போது வன்முறை வெடித்தது. இந்த வன்முறைக்கு முந்தைய நாள் நடைபெற்ற எல்கர் பரிஷத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் வன்முறையை தூண்டும் வகையில் பேசியது தான் காரணம் என கருதிய புனே போலீசார், இதுதொடர்பாக இடதுசாரி சிந்தனையாளர்கள் 9 பேரை கைது செய்தனர். முந்தைய பாரதீய ஜனதா ஆட்சியில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் புதிதாக பதவியேற்ற சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு இந்த வழக்கை மறு விசாரணை செய்ய முடிவுசெய்தது. இதையடுத்து உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையே திடீரென மாநில அரசின் ஒப்புதல் இன்றி இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு(என்.ஐ.ஏ.) மத்திய அரசு மாற்றிக்கொண்டது. இதற்கு மராட்டிய கூட்டணி அரசில் அங்கம் வகித்து வரும் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த நிலையில் சிவசேனாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது குறித்து அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

இந்தியா பல மாநிலங்கள் ஒன்றிணைந்த கூட்டாட்சி நாடு. அனைத்து மாநிலங்களுக்கும் அதற்கே உரித்தான உரிமைகளும், பெருமைகளும் உள்ளன. ஆனால் மத்திய அரசு இதில் உறுதியற்ற தன்மையை உருவாக்க முயற்சி செய்கிறது.

மராட்டியத்தில் தேசிய புலனாய்வு முகமை தலையிடுகிறது. ஆனால் பாரதீய ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் நடைபெறும் இதுபோன்ற வழக்குகளில் மத்திய அரசு ஏன் தலையிடுவதில்லை. இது பழிவாங்கும் அரசியலாகும். மத்திய அரசின் இந்த நடவடிக்கை அதிர்ச்சியும், சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. வழக்கில் உண்மை வெளிவருவதை தடுக்கவே மத்திய அரசு விரும்புகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story