கோவில்பட்டி, திருச்செந்தூரில் எல்.ஐ.சி. ஊழியர்கள் போராட்டம்


கோவில்பட்டி, திருச்செந்தூரில் எல்.ஐ.சி. ஊழியர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 4 Feb 2020 10:00 PM GMT (Updated: 4 Feb 2020 8:52 PM GMT)

கோவில்பட்டி, திருச்செந்தூரில் எல்.ஐ.சி. ஊழியர்கள் நேற்று ஒரு மணி நேரம் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி,

மத்திய பட்ஜெட்டில் எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எல்.ஐ.சி. ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்கக்கூடாது என்று வலியுறுத்தி, கோவில்பட்டி எல்.ஐ.சி. அலுவலகத்தில் ஊழியர்கள், வளர்ச்சி அதிகாரிகள், முகவர்கள் உள்ளிட்ட அனைவரும் நேற்று மதியம் ஒரு மணி நேரம் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க செயலாளர் ஆனந்தன், முதல்நிலை அதிகாரிகள் சங்க கிளை செயலாளர் அஜிகுமார், வளர்ச்சி அதிகாரிகள் சங்க கிளை செய லாளர் சுப்பிரமணியன், சி.ஐ.டி.யு. மாவட்ட பொறுப்பாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதேபோன்று திருச்செந்தூர் எல்.ஐ.சி. அலுவலகத்திலும் மதியம் ஊழியர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் ஒரு மணி நேரம் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். எல்.ஐ.சி. ஊழியர் சங்க நிர்வாகிகள் சண்முகம், திருச்செல்வம், கிறிஸ்டோபர், ஆல்பர்ட், ராஜவேல், சித்திரை ஹரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story